Skip to main content

காலை திறந்து வைக்கப்பட்ட பாலத்தில் விரிசல்-ஆட்சியர் நேரில் ஆய்வு

Published on 29/05/2025 | Edited on 29/05/2025
Cracks in the bridge that was opened this morning - Collector inspects in person

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் புதியதாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

குறிப்பாக பாமகவின் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்த குற்றச்சாட்டை அறிக்கை வாயிலாக வைத்திருந்தார், அதில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகரில்  3.40 கி.மீ தொலைவுக்கு கட்டப்பட்டுள்ள பாலத்தின் பல இடங்களில் விரிசல்கள் விழுந்துள்ளது அங்குள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும்,  அச்சத்தையும்  ஏற்படுத்தியுள்ளன. ரூ.320 கோடியில் கட்டப்பட்டுள்ள அந்த மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தான் திறந்து வைத்த நிலையில், அதற்கு முன்பாகவே பாலம் சேதமடைந்திருப்பது கட்டுமானப் பணிகளின் தரமற்றத் தன்மையைத் தான் காட்டுகின்றன.

பள்ளிப்பாளையம் பாலத்தைக் கட்டுவதில்  நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். பள்ளிப்பாளையம் மேம்பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ள நிலையில், அது போக்குவரத்திற்கு உகந்தது தானா? என்பது குறித்த பாதுகாப்பு தர ஆய்வுகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட பாலத்தின் உறுதித்தன்மை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்து வருகிறார்.

சார்ந்த செய்திகள்