Skip to main content

நெடுவாசலில் ஏப்ரல் 12 -ந் தேதி மீண்டும் போராட்டம்- ஆர்ப்பாட்டத்தில் அறிவிப்பு

Published on 18/02/2018 | Edited on 18/02/2018
neduvasal

    நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தபடி சோதனைக்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் அடுத்த போராட்ட தேதியும் அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

நெடுவாசல் திட்டம் :
    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்க கர்நாடகாவைச் சேர்ந்த ஜெம் என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய பெட்ரோலிய துறை கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ந் தேதி ஒப்பந்தம் வழங்கியது. இந்த அறிவிபப்பை தொடர்ந்து  16 ந் தேதி நெடுவாசல் கடைவீதியில் திரண்ட விவசாயிகள், மாணவர்கள், திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட ஆட்சியத் தலைவரிடம் மனு கொடுத்தனர்.

 

196 நாட்கள் போராட்டம் :
    ஆனால் மத்திய, மாநில அரசுகள் திட்டத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிடாத நிலையில் போராட்டம் வலுவடைந்து நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் போராட்டத்தை நடத்தினார்கள். இந்த முதல்கட்ட போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள், பல்வேறு சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், திரைத்துறையினர் என்று தினம் தினம் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதனால் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்தது. அதே போல நெடுவாசலை சுற்றியுள்ள புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 100 கிராம விவசாயிகள் விவசாய கருவிகள், விளை பயிர்களுடன் வந்து கலந்து கொண்டனர். 


    தொடர்ந்து 22 நாட்கள் போராட்டம் நடந்த நிலையில் மத்திய, மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் நடத்திய பேச்சுவார்த்தையாலும் மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டும் தற்காலிகமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போட்டதால் மீண்டும் இரண்டாம் கட்ட போராட்டம் தொடங்கி 174 நாட்கள் நடந்தது. 

 

    நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், தங்கள் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணறுகளை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு கிராமத்திலும் தொடர் போராட்டங்கள் நடந்தது. அங்கு சென்ற மாவட்ட ஆட்சியர் கணேஷ் 2017 டிசம்பர் இறுதிக்குள் அனைத்து ஆழ்குழாய் கிணறுகளும் அகற்றப்பட்டு விவசாயிகளிடம் நிலம் ஒப்படைக்கப்படும் என்று உறுதிமொழி கடிதம் கொடுத்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

 

ஆர்ப்பாட்டம் :
    மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் முடிந்த நிலையிலும் திட்டத்தை ரத்து செய்யாமல் தமிழக அரசு மற்றும் சுற்றுசூழல் அனுமதி கிடைத்த உடன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளதால் நெடுவாசல் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் மக்கள் மறு போராட்டத்திற்கு தயாராகி வந்தனர்.
    இந்த நிலையில் நெடுவாசல் கடைவீதியில் கூடிய விவசாயிகள்..  போராட்ட உயர்மட்டக்குழு தலைவர் முன்னால் எம்.எல்.ஏ புஷ்பராஜ் தலைமையில், ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன், முன்னால் எம்.பி. ராஜாபரமசிவம், முன்னால் எம்.எல்.ஏ சுவாமிநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர்கள் புதுக்கோட்டை செங்கோடன், தஞ்சாவூர் திருஞானம் ஆகியோர் முன்னிலையில் நெடுவாசல் திட்டத்தை ரத்து செய்து மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்து அரசாரண வெளியிட வேண்டும். தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.  மாவட்ட நிர்வாகம் எழுதிக் கொடுத்தது போல அனைத்து ஒ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணறுகளையும் அகற்றி விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து மாணவர்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், கலந்து கொண்டனர். 

 

ஏப்ரல் 12 ந் தேதி மீண்டும் போராட்டம் :
    ஆர்ப்பாட்டத்தின் போது போராட்ட காரணங்களை  உயர்மட்டக்குழு தெட்சிணாமூர்த்தி தீர்மானமாக நிiவேற்றி வாசித்தார். அதில் மத்திய, மாநில அரசுகள் நெடுவாசல் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சோதனை ஆழ்குழாய் கிணறுகளை மூடி விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் இந்த கோரிக்கைகள் ஏற்க மறுக்கப்படும் நிலையில் ஏப்ரல் 12 ந் தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்படும். அந்த போராட்டம் பற்றி உயர்மட்டக்குழு முடிவு செய்யும் என்ற தீர்மானத்தை வாசித்தார்.

 

சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவோம் :
    ஆர்ப்பாட்டத்தில் ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் பேசும் போது.. மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் இந்த தொகுதிக்குள் அனுமதிக்கமாட்டோம். 200 நாட்கள் வரை விவசாயிகள் தொடர்ந்து போராடியும் மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் தமிழக அரசு, தமிழக சுற்றுசூழல் அனுமதி கிடைத்தால் நெடுவாசல் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சொல்லி இருப்பது இந்த திட்டத்தை இன்னும் கைவிடவில்லை என்பதை தான் காட்டுகிறது. எங்கள் உயிர் இருக்கும் வரை இந்த திட்டத்தை செயல்படுத்தவிடமாட்டோம். சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம் ஆளும் கட்சி கண்டுகொள்ளவில்லை. மீண்டும் கவணஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம் என்பதை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அல்லது ஆளும் கட்சி தீர்மானம் கொண்டு வந்தால் எதிர்கட்சிகள் ஒருமனதாக ஆதரவு தெரிவிக்க காத்திருக்கிறோம். அடுத்த கட்ட போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லாமல் மத்திய மாநில அரசுகள் செயல்படும் என்று நினைக்கிறோம் தவறும் பட்சத்தில் பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என்றார்.

 

- பகத்சிங்


 

சார்ந்த செய்திகள்