Skip to main content

மீண்டும் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்-போலீசார் விசாரணை

Published on 10/06/2025 | Edited on 10/06/2025
Another attack on government bus driver - police investigating

விழுப்புரத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை தனியார் பேருந்து ஓட்டுநர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரத்திலிருந்து -புதுச்சேரி செல்லும் அரசு பேருந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள புதுச்சேரி பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை 8:30 மணியளவில் வந்து நின்றது. சங்கர் என்பவர் அரசு பேருந்தை ஓட்டி வந்தார். அதேநேரம் புதுச்சேரி செல்ல தனியார் பேருந்து ஒன்றும் காத்திருந்தது. அரசு பேருந்து வருவதைப் பார்த்த தனியார் பேருந்தில் இருந்த பயணிகள் அதிலிருந்து இறங்கி அரசு பேருந்தில் ஏறினர். இதனால் ஆத்திரமடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர் அரசு பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் வாக்குவாதம் முற்றி அரசு பேருந்து ஓட்டுநரை தனியார் பேருந்து ஓட்டுநர் சரமாரியாக தாக்கினார்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த போலீசார் காயமடைந்த அரசு பேருந்து ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநர் வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல அந்த தனியார் பேருந்து நடத்துநர் ஆனந்த் என்பவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் அரசு பேருந்து ஓட்டுநரை பேருந்து நிலையம் மேலாளர் ஒருவர் காலணியால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர் மீதான தாக்குதலுக்கு அரசு ஊழியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தனியார் பேருந்து ஓட்டுநர் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சார்ந்த செய்திகள்