Skip to main content

சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 1417 வாக்குச்சாவடிகள் அமைப்பு!

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 1417 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. சராசரியாக 1400 வாக்காளர்களுக்கும் குறையாத வகையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சேலம் மாவட்டத்தில் 2020ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக, உத்தேசிக்கப்பட்டு உள்ள வரைவு வாக்குச்சாவடிகள் விவரப்பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராமன் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) வெளியிட்டார். அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.


இதுகுறித்து ஆட்சியர் ராமன் கூறியதாவது:
 

 

 1417 polling stations for Salem district

 

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 2020க்கான சேலம் மாநகராட்சி, ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி, மேட்டூர் ஆகிய நான்கு நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடிகளின் விவரப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு குறைந்தபட்சம் 1400க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடியாக பிரிக்கப்பட்டு உள்ளது.

சேலம் மாநகராட்சியில் ஆண் வாக்காளர்களுக்கு 5 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்கு 5 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்கும் 644 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 654 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இது, ஏற்கனவே 2019ல் 654 வாக்குச்சாவடிகளும் ஆண், பெண் இருபாலருக்குமானவையாக இருந்தன.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் ஆண் வாக்காளர்களுக்கு மட்டும் 22 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்கு மட்டும் 22 வாக்குச்சாவடிகளும், ஆண், பெண் இருபாலருக்கும் சேர்த்து 12 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 56 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆத்தூர் நகராட்சியில் கடந்த 2019ல் மொத்தம் 63 வாக்குச்சாவடிகள் இருந்தன. அவற்றில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தலா 29 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்கும் சேர்த்து 5 வாக்குச்சாவடிகளும் இருந்தன.

மேட்டூர் நகராட்சியில் ஆண்களுக்கு 16 வாக்குச்சாவடிகள், பெண்களுக்கு 16 வாக்குச்சாவடிகள், இருபாலரும் வாக்களிக்கும் வகையில் 18 என மொத்தம் 50 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த 2019ல் மேட்டூர் நகராட்சியில் மொத்தம் 54 வாக்குச்சாவடிகள் இருந்தன.


எடப்பாடி நகராட்சியில் ஆண்கள் மற்றும் பெண் வாக்காளர்களுக்கென தலா 25 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்கும் சேர்த்து 8 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 58 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 2019ம் ஆண்டிலும் இதே எண்ணிக்கையில்தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

நரசிங்கபுரம் நகராட்சியில் ஆண், பெண்களுக்கு தலா 3 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்கென 15 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 21 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு அங்கு 24 வாக்குச்சாவடிகள் இருந்தன.

சேலம் மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் உள்ள ஆண் வாக்காளர்களுக்கு 68 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்கு 68 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்கும் 442 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 578 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே 2019ம் ஆண்டில், மொத்தம் 448 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.


சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கு மொத்தம் 139 ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும், 139 பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்கும் 1139 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1417 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.


கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 276 வாக்குச்சாவடிகள் குறைவு.


சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வரைவு விவரப்பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆய்வு செய்து, திருத்தங்கள் இருப்பின் வரும் 18ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். ஆட்சேபணைகள் இருப்பின் உரிய விவரங்களுடனான கடிதத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கலாம். அதுகுறித்து உரிய முறையில் பரிசீலித்து இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு ஆட்சியர் ராமன் கூறினார்.


இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இளங்கோவன் (உள்ளாட்சித் தேர்தல்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.