Skip to main content

ஜூனியர் அமைச்சர்களுக்கு டஃப் கொடுக்கும் சீனியர் அமைச்சர்!!

Published on 26/05/2021 | Edited on 26/05/2021
Senior ministers who run non-stop like junior ministers

 

புதிதாகப் பொறுப்பேற்ற தி.மு.க அரசு கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற முழு வீச்சோடு செயல்படுவதை ஒவ்வொரு மாவட்டத்திலும் காண முடிகிறது. ஜூனியர் அமைச்சர்களை விட சீனியர் அமைச்சர்களும் இடைவிடாமல் இயங்குகிறார்கள். அந்த வரிசையில் சீனியரான அமைச்சர் ஈரோடு சு.முத்துச்சாமி, அவரின் வேகமான செயல்பாட்டுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மாவட்ட அதிகாரிகள் தொடர்ந்து அமைச்சருடன் பயணிக்கிறார்கள்.  ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 25 ந் தேதி பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் வீட்டு வசதித்துறை அமைச்சரான சு.முத்துசாமி அங்கு ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

 

பிறகு நம்மிடம் பேசிய அவர், “தற்போதைய நிலையில், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதி சற்று குறைவாகவே இருந்தன. அதை அதிகரித்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் 131 ஆக இருந்த ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள், 250 ஆக  உயர்த்தப்படுகிறது. ஓரிரு நாளில், அவை செயல்பாட்டுக்கு வந்துவிடும். அதேபோல, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 550 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதியை, 650 ஆக உயர்த்தியுள்ளோம். அவ்வளாகத்தில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட, 300 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் வருகிற 28 ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும். அடுத்த ஒரு வாரத்தில் மேலும், 300 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் பயன்பாட்டுக்கு வருகின்றன. ஜூன், 20ந் தேதிக்குள் மேலும் 200 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் பயன்பாட்டுக்கு வருகின்றன. 

 

Senior ministers who run non-stop like junior ministers

 

இதன் மூலம், 1,550 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதி, பெருந்துறையில் இருக்கும். ஈரோடு மட்டுமின்றி அருகே உள்ள மாவட்டத்தினருக்கும், படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன் இணைப்பு கிடைக்கவில்லை என்ற புகார் வராமல் இங்கு சிகிச்சை பார்க்கப்படும். இதுதவிர கரோனா சிகிச்சைக்கான 3,500 சாதாரண படுக்கைகள் பள்ளி, கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் 1,000 படுக்கைகள் தவிர மற்றவை காலியாகத் தான் உள்ளன. வீடுகளில் தனிமைப்படுத்த வசதி இல்லாதவர்கள், மருத்துவ சிகிச்சை தேவை என்போர் அங்கு சிகிச்சையில் உள்ளனர். அதுபோல, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி, பவானி அரசு மருத்துவமனைகளில், தலா 100 படுக்கை ஆக்சிஜன் வசதியுடன் தரம் உயர்கிறது. இருப்பினும், அங்குக் குறிப்பிட்ட படுக்கைகளில் மட்டும் கரோனா நோயாளிகள் தங்க வைக்கப்படுவர். மற்ற படுக்கைகள், பிற கட்டடங்களில், வெளி நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கி, சிகிச்சை தொடரும்” என்றார்.

 

கடந்த 15 நாட்களில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்கள் விரைவாகக் கட்டப்பட்டு, அவை கரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் சிகிச்சைக்காகப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 
 

 


 

சார்ந்த செய்திகள்