
குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்து வந்த நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2019 மற்றும் 2024 என அடுத்தடுத்து நடைபெற்று மக்களவைத் தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மோடி பதவி வகித்து வருகிறார்.
மற்றொரு புறம் பா.ஜ.க.வில் 75 வயதுக்கு மேல் உள்ளவர் ஆட்சியில் பதவி வகிக்க கூடாது என்ற விதி உள்ளது. இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடிக்கு வரும் செப்டம்பர் 17ஆம் தேதியுடன் 75 வயது நிறைவடைய உள்ளது. இதனால் பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. அதே சமயம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு பிரதமர் மோடி நேற்று (30.03.2025) சென்றிருந்தார். பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு பிரதமர் மோடி செல்வது இது முதல் முறையாகும்.
இந்நிலையில் பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு சென்றது குறித்து சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறகு யார் என்பதை ஆர்.எஸ்.எஸ். தான் முடிவு செய்யும். பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு சென்றதற்கு காரணம் இருக்கிறது. அதாவது பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே அங்கு சென்றார்” எனத் தெரிவித்துள்ளார்.