
நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நாடு முழுவதும் நடைபெற்றன. இந்த தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது. இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி அதிமுக கூட்டணியில் தேமுதிக, திருவள்ளூர், மத்திய சென்னை, தஞ்சாவூர், விருதுநகர் மற்றும் கடலூர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி - பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். இத்தகைய சூழலில் தான் தமிழ்நாட்டில் 6 நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அந்த வகையில் அன்புமணி ராமதாஸ், மு. சண்முகம், என். சந்திரசேகரன், எம். முகமது அப்துல்லா, பி. வில்சன் மற்றும் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக் காலங்கள் முடிவடைய உள்ளன. இந்த காலி பதவியிடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 2ஆம் தேதி வெளியிடப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 09ஆம் தேதி ஆகும். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 12ஆம் தேதி ஆகும். வாக்கெடுப்பு ஜூன் 19ஆம் தேதி காலை 09:00 முதல் மாலை 04:00 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 19ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் இன்று (29.05.2025) செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் ராஜ்சபா சீட் தொடர்பாக பேசுகையில், “அரசியலில் நம்பிக்கை தான் முக்கியம். வார்த்தைகள் தான் முக்கியம். அந்த வார்த்தைப்படி நிச்சயம் நடப்பவர்கள் மேல் தான் மக்களுக்கும் சரி, தமிழகத்தில இருக்கிற எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை வரும்.
அதில் எந்த மாற்று கருத்துமே கிடையாது. அதனால் தான் நான் சொல்றேன் ராஜ்யசபா சீட் தர வேண்டியது அவர்களுடைய (அதிமுக) கடமை. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போதே 5 எம்.பி.யும், ஒரு ராஜ்யசபாவும் உறுதி செய்யப்பட்ட ஒன்று ஆகும். அதனால் தான் அவங்க கடமை என்று நான் சொல்கிறேன். ஏன்னென்றால் ஏற்கனவே 2 முறை தேமுதிகவுக்கு வந்த வாய்ப்பை, ஒரு முறை அன்புமணி ராமதாஸுக்கும், இன்னொரு முறை ஜி.கே. வாசனுக்கும் தந்தார்கார். அதை நாங்கள் மனதார ஏத்துக்கிட்டோம். அது மாதிரி இந்த முறை எங்களுக்கு தர வேண்டியது அவசியம் ஆகும். இது எங்களுடைய முறை (TURN - டேர்ன்). அதனால் தான் நான் சொல்கிறேன் ராஜ்யசபா சீட் தர வேண்டியது அவர்களுடைய கடமை. அவருடைய சொல்லில் நிச்சயம் உறுதியாக இருந்து நம்பிக்கைக்கு உரியவராக மக்களுக்கும் அவர் நிரூபிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.