Skip to main content

‘கோமாளித்தனமான உளறல்; ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது!’ - கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு!

Published on 18/01/2021 | Edited on 18/01/2021

 

“துக்ளக் குருமூர்த்தியைப் பொறுத்தவரை அவரது உரை முழுவதுமே ஒரு கோமாளித்தனமான உளறலாகவே அமைந்துவிட்டது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''‘துக்ளக்’ இதழின் ஆண்டு விழாவில் உரையாற்றிய எஸ். குருமூர்த்தி, பா.ஜ.க.வுக்கு வரம்பு மீறி வக்காலத்து வாங்கிப் பேசியிருக்கிறார். பா.ஜ.க. இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் வளரும் என்று ஆருடம் கூறியிருக்கிறார். சிறையிலிருந்து வெளிவரும் சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொண்டு தி.மு.க. கூட்டணியை வீழ்த்த வேண்டுமென்று ஆலோசனை கூறியிருக்கிறார். 

 

இதற்கு உடனே தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் கடுமையாகக் குருமூர்த்தியை விமர்சனம் செய்திருக்கிறார். அதில், 'தினகரனிடம் காசு வாங்கிக்கொண்டு பேசி வருகிறார். நாரதர் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார். அவர் தன்னை ஒரு கிங் மேக்கர் என்று பில்டப் செய்து வருகிறார்' என்று  கடுமையான தாக்குதலைத் தொடுத்திருக்கிறார். 

 

இத்தாக்குதலைத் தொடர்ந்து தமது டிவிட்டர் பக்கத்தில் குருமூர்த்தி திடீர் பல்டி அடித்து அ.ம.மு.க.வை இன்னமும் மன்னார்குடி மாபியாவாகத்தான் கருதுகிறேன் என்று கூறி தமது ஆலோசனையைத் திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறார். 

 

துக்ளக் குருமூர்த்தியைப் பொறுத்தவரை அவரது உரை முழுவதுமே ஒரு கோமாளித்தனமான உளறலாகவே அமைந்துவிட்டது. அ.தி.மு.க.வுக்கு அரசியல் தரகராக தம்மையே தானாக நியமித்துக்கொண்டு கூட்டணிக்குக் குந்தகம் விளைவிக்கிற வகையில் அனுகூல சத்ருவாக மாறிய அவர், ஞானோதயம் ஏற்பட்ட பிறகு, தான் கூறிய கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். 

 

மேலும், தேவையில்லாமல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியைக் குருமூர்த்தி சீண்டிப் பார்த்திருக்கிறார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்பதற்காக, அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு அச்சாரம் போட்டிருக்கிறார். 

 

அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியைப் பற்றி கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டிருக்கிறார். ‘துக்ளக்’ ஆசிரியராக சோ இருந்தபோது, ஒருகாலகட்டம் வரை பெருந்தலைவர் காமராஜரையும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியையும் ஆதரித்து எழுதியும், பேசியும் வந்திருக்கிறார்.

 

1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனக் கூட்டத்தில் பங்கேற்ற சோ அவர்கள், 'அயோத்தியில் நடந்தது அயோக்கியத்தனம்' என்று கடுமையாக விமர்சனம் செய்ததைக் குருமூர்த்தியால் மறுக்க முடியாது. ஏனெனில் அப்போது வெளிவந்த ‘துக்ளக்’ அட்டைப் படத்தில் கருப்பு வர்ணம் பூசி, எதிர்ப்பை தெரிவித்ததோடு, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்து தலையங்கம் எழுதியவர் சோ. 

 

அதேபோல, 1996 தேர்தலில் ஜெயலலிதாவின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்ற நடிகர் ரஜினிகாந்தை களம் இறக்கி, தி.மு.க., த.மா.கா. கூட்டணியை வெற்றிபெற வைப்பதில் பெரும் துணையாக இருந்தவர் சோ. ஆனால், இன்றைய ‘துக்ளக்’ இதழ் குருமூர்த்தியிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது. வகுப்பு வாதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. 

 

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., வகுப்புவாத சக்திகளின் ஊதுகுழலாகக் குருமூர்த்தி செயல்பட்டு வருகிறார். தற்போது, பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் கூட்டணியை ஏற்படுத்த அரசியல் தரகராக மாறியிருக்கிறார். தமிழக மக்கள் மீது நலனோ, சமூக நீதியில் அக்கறையோ, தமிழகத்தின் உரிமைகளைக் காப்பதிலோ, தமிழ் மொழி புறக்கணிப்பதைத் தடுப்பதிலோ அக்கறை காட்டாத வகுப்புவாத சனாதன அரசியல் நடத்துகிற குருமூர்த்தி, திரைக்குப் பின்னாலே இருந்துதான் செயல்பட முடியுமே தவிர, மக்கள் மன்றத்திற்கு வர முடியாது. ஆண்டுக்கு ஒருமுறை ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் பங்கேற்கிற குருமூர்த்தி, தமிழக மக்களின் நாடித் துடிப்பை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

 

தமிழக மக்கள் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறார்கள். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 54 சதவிகித வாக்குகளைப் பெற்று 39 இடங்களில் 38 இடங்களில் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டுமா? மோடி வர வேண்டுமா? என்று கேள்வி எழுந்தபோது தமிழக மக்கள், மோடியை விட ராகுல் காந்திக்கு 60 லட்சம் மக்கள் அதிகமாக வாக்களித்திருந்தார்கள். 

 

தமிழக மக்கள் நேரு பாரம்பரியத்தில் வந்த ராகுல் காந்தியை எந்தளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதை மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சான்றாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான் ஜல்லிக்கட்டு குறித்து ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள். 

 

ஆனால், 2004 முதல் 2014 வரை மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடைபெற்றதையும், பா.ஜ.க. ஆட்சியில் 2015 - 16 இல் நடைபெறவில்லை என்பதையும் எவராலும் மறுக்க முடியவில்லை. எனவே, தமிழ் மக்கள் மோடி மீது இருக்கிற வெறுப்பை மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெளிப்படுத்தத் தான் போகிறார்கள். அதனால், பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படுகிற நிலையை ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.” இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.