
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை விவசாயம் பயின்ற மாணவியை மயக்கி ஆசை வார்த்தை கூறி பல்கலைக்கழக விவசாயத்துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றும் ராஜா (55) என்பவர் பலமுறை தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து விட்டு சென்ற மாணவி தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். இவரை உதவி பேராசிரியர் ராஜா தனிமையில் இருந்த வீடியோ மற்றும் போட்டோ உள்ளது என்று மிரட்டியதாக மாணவி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் உதவி பேராசிரியர் ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் மாணவியிடம் தனிமையில் இருந்ததை ஒப்புக்கொண்டார்.
இதனையொட்டி அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்து சனிக்கிழமை இரவு சிறைக்கு அனுப்பினர். மாணவியிடம் உதவி பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக பல்கலைக்கழக வட்டாரத்தை மட்டுமல்லாமல் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் ராஜா பல்கலைக்கழகத்தில் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.