Skip to main content

“எதிர்க்கட்சித் தலைவர் சந்தேகப் பேர்வழியாக இருக்கிறார்..” - எடப்பாடி பழனிசாமி!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

Edappadi palanisamy about MK stalin in erode election campaign

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி உட்பட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதைத் தொடர்ந்து இன்று 7ஆம் தேதி வியாழக்கிழமை, மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலை 9 மணிக்கு ஈரோடு  வந்தார்.   


கருங்கல்பாளையம் காவிரி கரையில், மாவட்ட அ.தி.மு.க சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், தங்கமணி, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்ரமணி ஆகியோர் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த பாசறை கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் வீரப்பன்சத்திரம் பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “ஜெயலலிதா மறைவிற்குப் பின் நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. எனக்கு பின்பும் நூற்றாண்டுக் காலம் அ.தி.மு.க., ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் என சட்டமன்றத்தில் ஜெயலலிதா சூளுரைத்தார். அவர் மறைந்தாலும், அவர் ஆற்றிய பணி இன்னும் இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்கள் நாட்டுக்காக, பிறந்து சேவை செய்தனர். அவர்கள் வழியில் எனது அரசு செயல்பட்டு வருகிறது.

 

இன்றைக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தினமும் பொய் அறிக்கை வெளியிட்டு, அரசின் மீது பழி சொல்லியும், அமைச்சர் மீது குறை சொல்லியும் அவதூறு பேசுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.  இந்தத் தேர்தல் மூலம் அவரை நிராகரித்து அ.தி.மு.க. வெற்றிக்கொடி நாட்ட வேண்டும்.


தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசுவது அத்தனையும் பொய். இம்மியளவும் கூட உண்மை இல்லை. அவர்கள் ஆட்சியில் அமைச்சராக இருந்த 13 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது. அதை மறைப்பதற்காக, வேண்டுமென்றே திட்டமிட்டு, ஆட்சி மீதும், அமைச்சர்கள் மீதும் வீண்பழி சுமத்திவருகின்றார். திட்டமிட்டு அரசியல் சூழ்ச்சி செய்து, அரசியல் நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றி வருகிறார். 


அ.தி.மு.க. ஆலமரம் போன்றது. மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களைக் கொடுக்கும் கட்சி. ஈரோடு மாநகரில் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். ஏழைகள் மருத்துவ சிகிச்சை பெற தொடங்கப்பட்ட மினி கிளினிக் திட்டத்தை நாடே போற்றுகிறது. ஆனால், ஸ்டாலின் மட்டும் குறை கண்டுபிடிக்கிறார். இதில் என்ன குறை, சந்தேகம் அவருக்கு வந்தது எனத் தெரியவில்லை. எதிர்க்கட்சித்தலைவர் எதைத்தொட்டாலும் சந்தேகப் பேர்வழியாக இருக்கிறார். 

 

cnc

 

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 41 சதவீத மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் கடந்த ஆண்டு 6 இடங்கள் மட்டுமே மருத்துவக் கல்வி கிடைத்தது. நானும் கிராமத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்தவன் என்ற முறையில், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி படிக்க 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கினேன். இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் 313 பேர் எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகள் மூலம் 130 பேர் சேருவார்கள். இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் 443 பேர் மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கிறது" எனப் பேசினார். 

 

தொடர்ந்து சித்தோடு, ஊத்துக்குளி, பெருந்துறை பகுதிகளில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, மாலையில் சுதந்திரப் போராட்டத் தியாகி தீரன் சின்னமலையின் பிறப்பிடமான ஓடாநிலை கிராமத்திற்குச் சென்று சின்னமலையின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.