Skip to main content

‘பதவி கேட்பதற்கு செத்துபோயிடலாம்’;ஓரங்கட்டிய பிரதமர் - அதிர்ச்சியில் முக்கிய புள்ளி

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
PM Modi sidelined Shivraj Singh Chouhan in Madhya Pradesh politics

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தல் கடந்த நவம்பர் 17ஆம் தேதி நடைப்பெற்றது. அங்கு, 230 சட்ட போரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குபதிவு நடந்து முடிந்தது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, முதல்வர் வேட்பாளராக யாரையும் முன் நிறுத்தாமல், கர்நாடக சட்டமன்ற தேர்தல் பாணியில் பிரதமர் மோடியை முன் வைத்து தேர்தலில் களம் இறங்கியது. தேர்தல் முடிவில், 230 தொகுதிகளில் 163 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வென்று இந்த முறையும் ஆட்சியை தக்க வைத்தது. அதனை தொடர்ந்து யார் அடுத்த முதல்வர்? என கட்சிக்குள்ளேயே இழுபறி நிலவியது.

அடுத்து மீண்டும் முதலமைச்சராக சிவ்ராஜ் சிங் சவுகானே தொடர்வார் என அவரின் ஆதரவாளர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த போட்டியில், நரேந்திர தோமர், பிரஹலாத் படேல் போன்ற மூத்த தலைவர்களின் பெயரும் இருந்தாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, அடுத்த முதல்வர் இவர் தான், என பல பெயர்களை முன்னணி ஊடகங்கள் வெளியிட்டன. இந்நிலையில், டிசம்பர் 12ம் தேதி பாஜக கட்சியின் எம்.எல்.ஏ கூட்டம் நடப்பெற்றது. யாரும் எதிர்பாராத திருப்பு முனையாக, பரிந்துரையிலேயே இல்லாத நபராக உஜ்ஜைன் தொகுதி எம்.எல்.ஏ மோகன் யாதவ், அடுத்த மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து, மாநிலத்தில் இந்த முறை இரண்டு துணை முதல்வர்கள் என,  ஜெகதீஷ் தியோரா மற்றும்  ராஜேந்திர சுக்லா இருப்பார்கள் என அறிவிப்பு வெளியானது. மேலும், சட்டப்பேரவை சபாநாயகராக கட்சியின் மூத்த உறுப்பினர் நரேந்திர சிங் தோமர் இருப்பர் என முடிவு செய்யப்பட்டது. இந்த அறிவிப்புகளை சிவ்ராஜ் சிங் சவுகான் எல்லோர் முன்னிலையிலும் அறிவித்தார். கூட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட புதிய முதல்வர் மோகன் யாதவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஆனால், கூட்டம் முடிந்த பிறகு சிவராஜ் சிங், ஊடகங்கள் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல நழுவி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, வேறு வழியின்றி சிவராஜ் சிங் சவுகான் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து, புதியதாக பொறுப்பேற்றுள்ள மோகன் யாதவ் மாநில ஆளுநர் மங்குபாய் படேலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். 

இந்த முடிவு மத்திய பிரதேச பிஜேபி கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. புதியதாக தேர்வு செய்யப்பட்ட மோகன் யாதவ் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் வளர்ந்து வந்தவர். இதனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கிடைத்துள்ளது. இவர், 2018ம் ஆண்டு இரண்டாவது முதல்முறையாக எம்எல்ஏ ஆனார். அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே, மாநிலத்தின் உயர் கல்வி அமைச்சராக பதவியேற்றார். அதன், பிறகு ஆர்.எஸ்.எஸ் செல்வாக்குடன், மாநிலத்தின் முதவர் பதவிக்கு வந்து விட்டார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிகின்றனர். 

ஆனால், நீண்ட காலம் பாஜகவில் முதல்வர் பதவியை வகித்த பெருமையை கொண்ட சிவராஜ் சிங் சவுகான், தனி பெரும் ஆளுமையாக வளர்ந்து வருகிறார் என்பதற்காக வேண்டுமென்றே பிஜேபியின் தலைமை பதவியை பறித்துள்ளது. இதனை சொந்த கட்சியே செய்யலாமா? என போர்க்கொடி தூக்குகின்றனர் சிவராஜ் சிங் சவுகான் ஆதரவாளர்கள். மேலும், சமூக வலைத்தளங்களிலும், "மேற்கை ஏற்காதே.. வீழும் சூரியனே.. தார்மம் தோற்காதே.. ஆளும் காவலனே.. "என சிவராஜ் சிங் சவுகானுக்கு அதரவாக பல பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டிசம்பர் 12ம் தேதி, முதல்வர் பதவியில் இருந்து விலகிய சிவராஜ் சிங் சவுகானை, அவரது வீட்டில் சந்தித்த பெண் தொண்டர்கள், திடீரென்று அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். தொண்டர்களின் தலையில் கைவைத்து ஆசுவாசப்படுத்திய முன்னாள் முதல்வர், "எனக்காக பதவி கேட்பதை விட செத்துப்போவது மேல். கட்சி எனக்கு எந்த பணியை கொடுத்தாலும் நான் செய்ய காத்திருக்கிறேன். இதனை, தாழ்மையுடன் சொல்ல விரும்புகிறேன். ஒருவர் சுயநலமாக இருக்கும்போது, ​​அவர் தன்னைப் பற்றியே சிந்திக்கிறார். ஆனால் பாஜவில் ஒவ்வொரு ஊழியருக்கும் சில வேலை இருக்கிறது. எனக்கு ஒதுக்கப்பட்ட எந்த வேலையையும் நான் செய்வேன். எனக்கு எந்த அநீதியும் இழைக்கவில்லை. சாதாரண தொண்டனான நான், 16 ஆண்டுகளாக முதல்வராக இருந்துள்ளேன். இதை விட வேறு என்ன வேண்டும்" என கூறிக்கொண்டே அங்கிருந்த பெண் தொண்டர்களை ஆசுவாசப்படுத்தினார்.

மேலும் பேசிய அவர், ''செடி நடுதல் என்பது எனக்கு பிடித்தமான விஷயம். புதிய முதல்வர் டாக்டர் மோகன் யாதவிடம் நான் கேட்பது ஒன்றுதான், நான் செடி நடுவதற்கு அரசு நிலத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும்" என கோரிக்கை வைத்தார். மத்திய பிரதேச அரசியலில் சிவராஜ் சிங் சவுகான் ஒதுக்கப்பட்டதற்கு காரணம், "அவரின் மீது காங்கிரஸ் கட்சியினர் 'போன் பே 50% கமிஷன்' என்று  மத்திய பிரதேசம் முழுவதும் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் ஒட்டியது. சிறுபான்மையினருக்கு எதிரான புல்டோசர் கலாச்சாரம் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீதான அடக்குமுறை குற்றச்சாட்டுகள் குவிந்தது போன்றவை, அவருக்கு எதிர்வினையாக மாறிவிட்டது. பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை வைத்து, எதிர்க்கட்சிகள் ஓபிசி பிரதிநிதித்துவ பிரச்சனையை எழுப்பின. புதியதாக தேர்வு செய்த முதல்வரும் ஓபிசி பிரிவினர் என்பதால், இந்த நியமனத்தை பகடைக்காயாக வைத்து பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திலும் பா.ஜ.க கட்சி காய் நகர்த்தியுள்ளது" என அரசியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், முதல்வராக தேர்வாகிய பின் பேசிய மோகன் யாதவ், "என்னைப் போன்ற சிறிய தலைவருக்கு, பொறுப்பு வழங்கிய மத்திய, மாநில தலைமைக்கு நன்றி. இதுதான் பாரதிய ஜனதா கட்சி. இந்த பொறுப்பிற்கு நான் தகுதியானவன் இல்லை. என்றாலும் உங்கள் அன்பும், ஆசியும், ஆதரவும் கிடைத்தால், கண்டிப்பாக சாதிக்க, முடிந்த வரை முயற்சி செய்வேன். மீண்டும் நன்றி" என உற்சாகமாக பேசினார்.

பிஜேபியின் புதிய அரசியல் யுக்தி, மத்திய பிரதேச பாஜக அரசியலில் பெரும் பரபரப்பையும் அதிருப்தியும் ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.