Skip to main content

கேரளா: கரோனா தேவி கோயில் பூஜிக்கும் பூசாரி...

Published on 17/06/2020 | Edited on 17/06/2020
Corona Devi Temple in Kerala

 

கொடூர கரோனாவின் ஆக்டோபஸ் கொடுக்குகள் சுனாமியாய் பாய்ச்சலெடுத்திருக்கிறது. வல்லரசுகளென்ன, படா படா ஜாம்பவான் நாடுகள்கூட அதன் கோரப்பிடியில் சிக்கித் தவிப்பதுடன் மீள தடுப்பு மருந்துகளின் வழிதெரியாமல் பல வழிகளிலும் கிழிந்து கந்தலாகிப் போய்க்கிடக்கிறது.

வேறு பாதை தெரியாமல் தவிக்கும் இந்திய மக்கள், தங்களின் கடைசி நம்பிக்கையான, தாக்கும் அதனிடமே சரணாகதியடைவது என்ற முடிவுதான் தற்போது வெளிப்படையாகியிருக்கிறது. வம்பு எதற்கு என கரோனாவிடமே சரணடைந்து விட்டனர் போல மக்கள்.

அதன் முன்னோட்டம்தான் உ.பி., பீகார், ஜார்கண்ட், அசாம் போன்ற மாநிலங்களில் (பழங்குடியினர் உட்பட) பெண்கள், கரோனா பூஜை நடத்தி வருகிறார்களாம். ”கரோனா மாயி” என வைரஸை பெண் தெய்வமாக்கி வணங்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு “WHAT WAS ILLEGAL YESTERDAY, IS LEGAL TODAY. WHAT IS ILLEGAL TODAY, WILL BE LEGAL TOMORROW.”

அதாவது, நேற்று எவை எல்லாம் தப்பான காரியம் என்று சொல்லப்பட்டதோ அவைகள் இன்று நியாயமாகியுள்ளது. இன்றைக்கு எதெல்லாம் முரண்பாடானது, கேடான செயல் என்று சொல்லி ஒதுக்கப்படுவது, நாளை அதுவே நியாயம் என்று மாறும் என்பதே.

அதே போன்றுதான் பெண்களின் நம்பிக்கையான கரோனா மாயி வழிபாட்டைபோல கேரள மாநிலம் கொல்லத்தின் கடைக்கல் பகுதியைச் சேர்ந்த அனிலன் முகூர்த்தன் என்கிற ஆன்மீக நபர் கரோனா தேவி என்று ஒரு அம்மன் சிலை அமைத்து அதனை கரோனா தேவி என்று பூஜை புனஸ்காரங்களை செய்து வருகிறார். அதை தன் வீட்டின் மேல்மாடியில் கோவிலாகவே அமைத்துள்ளார். இது மாவட்ட மட்டுமல்ல கேரளாவின் பிற பகுதிகளிலும் தற்போதைய ஹாட் டாப்பிக்காகியுள்ளது. தத்துவப்படி இச்செயல் நாளைய தினம், சரியானது என்று கூட பரவலாக்கப்படலாம் யார் கண்டது. அனிலனின் கரோனா தேவி ஆலயம் குறித்து நாம் அவரிடம் பேசினோம். இப்படி செய்வதால் உங்களை பைத்தியக்காரன் என்று சொல்வார்களே என்றதற்கு.

“அவரோ எனக்கு யாருடைய சர்ட்டிபிகேட்டும் தேவையில்லை. என் மனதில் தோன்றியதைச் செய்துள்ளேன். வேத புராணத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஒருவர் இந்த கடவுளைத் தான் வழிபட வேண்டும் என்று அது சொல்லவில்லை. என் இஷ்டம் நான் கரோனாவை தேவியாக வழிபடுகிறேன்.

இந்தக் கரோனா யுகத்தில் மக்களில் எத்தனை பேர் நிம்மதியாக நார்மலான மனப்பக்குவத்தில் இருக்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா. நீங்கள் நார்மலாக இருக்கிறீர்களா. நான் நார்மலாகத்தானிருக்கிறேனா சொல்லுங்கள் என்றால் இங்கு யாரும் நார்மல்லாயில்லை.

தேசத்தில், தமிழகத்தில் பலகால ஆண்டுகளுக்கு முன்பு சிக்கன் பாக்ஸ் என்று சொல்லக் கூடிய அம்மை நோய் பரவியது. பலர் அதற்குப் பலியானார்கள். அது ஒரு வைரஸ்தான். பின்பு சிக்கன் பாக்ஸ் நோயையே அம்மன் என தெய்வமாக்கி மக்கள் வழிபடவில்லையா? அதனை நம் கேரளாவில் வைசூரி என்கிறார்கள். பின்பு வைசூரி என்று சிலை வைத்து வழிபட்டார்கள் மக்கள். இப்போது கொல்லம் உட்பட கேரளாவில் பல நூறு வருடங்களுக்கு முன்பே கோவில்களில் வைசூரி கோயில் என்று தனிக் கோவிலே இருக்கிறது. அது உங்களுக்குத் தெரியாதா? என்றவரிடம் இது மூட நம்பிக்கைத்தானே என்று கேட்டதற்கு.

எது மூட நம்பிக்கை. உங்களின் நம்பிக்கை எனக்கு மூட நம்பிக்கையாகப்படலாம். என்னுடைய நம்பிக்கை உங்களுக்கு மூட நம்பிக்கையாகப்படலாம். அம்மை நோயான சிக்கன் பாக்ஸ் வைரஸ்தானே. அதேபோன்று கரோனாவும் ஒரு வைரஸ்தான். அதனால் தான் கரோனா தேவி ஆலயம் அமைச்சிருக்கேன். இது என்னுடைய தனிப்பட்ட  பிரைவஸி.

பசுவின் கன்றுக்குட்டிக்கும், யானைக்கும் கோயில் வைச்சிறுக்காங்கயில்லியா. அதைக் கும்புடுதீக. யானை, பாம்பு, நீங்க கடவுளா நெனைச்சுப் பூஜை பண்ணலியா. அதைப்போலதான் நான் கரோனா வைரஸ்ல கடவுளிருக்கார்னு நம்புறேன். அதனால பூஜை செய்றேன் இது தப்பா.

நா, யாரையும் இதைக் கும்புட வாங்கன்னு சொல்லல. என் வீட்டுக் கோவிலுக்கு வாங்கன்னு யாரையும் கூப்பிடல. என் வீட்டுக்கு யாரும் வரவேண்டாம்னு சொல்றேன். பூஜை பண்ணி, உண்டியல்ல காசு போடுங்கன்னு யாரையும் அழைக்கல்ல. என்னுடய தனிப்பட்ட பிரைவஸியில தலையிட யாருக்கும் உரிமையில்ல. கரோனாவ நான் தெய்வமாக பூஜித்து சூடம் காட்டுறேன்” என்றார் ஓங்கிய குரலில்.

அனிலனின் பூர்வீக குடும்பத்தார்க்கென்றே வேறொரு பகுதியில் தனிக்கோவிலே இருக்கிறதாம். தன்னுடைய சிறிதளவு இடத்தில் காய்கறிகளை பயிரிட்டு வியாபாரம் செய்பவர். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட அனிலன், தன் வீட்டின் மாடியில் பூஜை அறையுடன் கூடியதில் தனியாகக் கரோனா தேவி சிலை அமைத்துப் பூஜிக்கிறார். வருங்காலங்களில் கரோனா தேவிக்குக் கொடை கொடுத்தும் கொண்டாடப்படலாம். யார் கண்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.