Skip to main content

மோடியை புகழ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் - உருவபொம்மையை எரித்த காங்கிரஸார்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

ghulam nabi azad

 

காங்கிரஸ் கட்சியில் 23 மூத்த தலைவர்கள் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் காங்கிரஸ் தலைமையின் முடிவுகளை எதிர்த்தும், விமர்சித்தும் வருகின்றனர். இவர்களில் கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரும் அடங்குவர். இவர்கள் ஜி-23 என அழைக்கப்படுகிறார்கள். இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரில், நேற்று (01.03.2021) ஜி-23 தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய கபில் சிபல் உள்ளிட்டோர், ‘காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துவிட்டது’ எனக் கூறினர்.

 

இந்த நிகழ்வில் பேசிய குலாம் நபி ஆசாத், பிரதமர் மோடியைப் புகழ்ந்தார். இதுதொடர்பாக அவர், "நரேந்திர மோடியிடமிருந்து மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் பிரதமரான போதிலும், அவர் தனது வேர்களை மறக்கவில்லை. அவர் பெருமையுடன் தன்னை ஒரு சாய்-வாலா (டீ விற்பனையாளர்) என்று அழைத்துக்கொள்கிறார். நாங்கள் அரசியல் போட்டியாளர்கள், ஆனால் அவர் தனது உண்மையான ரூபத்தை மறைக்கவில்லை என்பதை நான் பாராட்டுகிறேன்" எனத் தெரிவித்தார்.

 

ஏற்கனவே குலாம் நபி ஆசாத், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கட்சிக்குள்ளேயே குரல் எழுந்து வரும் நிலையில், அவர் பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசியிருப்பது கட்சிக்குள் புயலைக் கிளப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸார், குலாம் நபி ஆசாத்தின் உருவப்பொம்மையை எரித்து, அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், "காங்கிரஸ் அவரை மிகவும் மதித்தது. ஆனால் இன்று அதை ஆதரிக்க வேண்டிய நேரம் வந்தபோது, அவர் பாஜகவுடன் திருட்டுத்தனமாக நட்பை உருவாக்கிக் கொண்டுள்ளார். அவர் டிடிசி (ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல்) தேர்தல்  பிரச்சாரத்திற்கு வரவில்லை, ஆனால் இப்போது அவர் இங்கு வந்து பிரதமரைப் புகழ்கிறார்" எனத் தெரிவித்தனர்.

 

சமீபத்தில், பதவிக்காலம் முடிவடைந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றபோது, பிரதமர் மோடி கண்ணீர் மல்க குலாம் நபி ஆசாத்தைப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.