Skip to main content

ஒருதலைக்காதல் விபரீதம் - சென்னையில் மாணவி கழுத்தறுத்து கொடூரக்கொலை!

Published on 09/03/2018 | Edited on 09/03/2018
asvini

 

சென்னையில் கே.கே.நகர் மேற்கில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி அஸ்வினி, இன்று கல்லூரி முடிந்து வெளியே வந்தபோது அழகேசன் என்ற இளைஞரால் கொடூரமாக கழுத்தறுத்துக் கொல்லப்பட்டார்.

 

மதுரவாயல் பகுதியைச்சேர்ந்தவர் அஸ்வினி.  தந்தை இல்லாத நிலையில் தாய்தான் அவரை படிக்க வைத்து வந்தார்.  அதே பகுதியைச்சேர்ந்த அழகேசன் என்ற இளைஞர் அஸ்வினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடைசிவரை அஸ்வினி அழகேசனின் காதலை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அழகேசன்,  அஸ்வினியின் வீட்டு வாசலில் வைத்தே கட்டாய தாலி கட்டியுள்ளார்.   இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கவே, போலீசார் அழகேசனை விசாரித்து கண்டித்து அனுப்பி வைத்தனர்.  ஆனால், அதன்பின்னரும் அஸ்வினியை தொடர்ந்து வந்து தொல்லைகள் கொடுத்து வந்துள்ளார் அழகேசன்.   இதனால் மதுரவாயல் பகுதியை விட்டு, உறவினர் வீடான ஜாபர்கான் பேட்டையில் தங்கியிருந்து அங்கிருந்து கல்லூரிக்கு வந்து சென்றார் அஸ்வினி.

 

இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் கல்லூரி முடிந்து வெளியே வந்து, லோகநாதன் தெருவில் நடந்து சென்ற அஸ்வினியை மறித்து காதலை ஏற்கச்சொல்லி வற்புத்தினான் அழகேசன்.  அஸ்வினி மறுக்கவே, சற்றும் எதிர்பாராத விதமாக கத்தியை எடுத்து அஸ்வினியின் கழுத்தை அறுத்தான் அழகேசன்.  இதில், அலறித்துடித்த அஸ்வினி ஓட முடற்சித்தார்.  ஆனால், ஓட முடியாமல் ரத்த வெள்ளத்தில் மயங்கிச்சரிந்தார்.  அஸ்வினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் அழகேசனை பிடித்து கடுமையாக தாக்கினர்.   அடித்து உதைத்து கை, கால்களை கட்டி சம்பவ இடத்திற்கு போலீசார் வந்ததும் அழகேசனை பொதுமக்கள் அவர்களிடம் ஒப்படைத்தனர். 

 

அஸ்வினியை  அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி அஸ்வினி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

சார்ந்த செய்திகள்