Skip to main content

மக்களவையில் பாஜகவைப் பதறவிட்ட தமிழக எம்.பி.க்கள்!

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

நமது வழியையும் ஆயுதத்தையும் எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்று சொல்லப்படுவதுண்டு.
 

loksabha


புதிய மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளும் பாஜக எடுத்த ஆயுதம், தமிழக எம்.பி.க்களின் ஆயுதத்தை தீர்மானிக்க உதவியிருக்கிறது.

மக்களவையில் இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை என்று சொல்லுமளவுக்கு, இந்த பதவியேற்பு நிகழ்வு அமைந்துவிட்டது. புதிய உறுப்பினர்கள் உறுதியேற்பு நிகழ்வு ஜூன் 17 ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கியது. பெரும்பான்மையோடு பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் என்ன நடக்கும் என்று இந்த நாடு அஞ்சியதோ அதன் தொடக்கமாகவே நேற்று அந்தக் கட்சியின் போக்கு அமைந்தது.

ஸ்மிருதி ராணி உறுதிமொழி ஏற்க அழைக்கப்பட்டவுடன் மோடி உள்ளிட்ட பாஜகவினர் நீண்ட நேரம் மேஜைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். இதுவே ஒருவிதமான அநாகரிகமாக கருதப்பட்டது. அமேதி தொகுதியில் ராகுலை தோற்கடித்ததை கொண்டாடும் வகையில் அவர்களுடைய செயல் அமைந்தது. எதிர்காலத்தில் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று நடுநிலையாளர்கள் கூறினார்கள்.

இந்த அத்துமீறல் அத்துடன் முடிந்துவிடவில்லை. மத்திய அமைச்சர்கள் ஹர்ஷவர்தன், அஸ்வினி சவ்பே உள்ளிட்ட சிலர் இந்தியாவின் அலுவல் மொழியாகக்கூட இல்லாத சில ஆயிரம் பேர் மட்டுமே பேசக்கூடிய சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்றார்கள். அவர்களைத் தொடர்ந்து பல்வேறு மாநில மொழிகளிலும் உறுதிமொழி ஏற்கத் தொடங்கினார்கள்.
 

 

loksabha


மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளியான பிரக்யா தாகூர் உறுதிமொழி ஏற்றபோது தன்னை பெண்துறவி என்று கூறினார். மக்களவை விதிகளுக்கு புறம்பான இந்த வார்த்தைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. உடனே, மீண்டும் சாத்வி என்ற வார்த்தை இல்லாமல் பிரக்யா உறுதிமொழி ஏற்றார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள் சிலர் பதவியேற்க வந்தபோது பாஜக உறுப்பினர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினார்கள். மக்களவை மரபுகளுக்கு மாறான இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க தமிழக எம்.பி.க்கள் முடிவெடுத்தனர்.

அதன்படி செவ்வாய்க்கிழமை 18 ஆம் தேதி தமிழக எம்.பி.க்கள் அழைக்கப்பட்டபோது திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் தமிழில் உறுதிமொழி ஏற்று முடித்தவுடன் வாழ்க பெரியார் என்று கூறினார். இப்படித்தான் தொடங்கியது தமிழக எம்.பி.க்களின் அதிர்ச்சி வைத்தியம்.
 

loksabha


பெரியார் என்ற பெயர் பாஜகவினரிடம் பதற்றத்தை உருவாக்கியது. நீங்கள் ஸ்ரீராம் என்றால் நாங்கள் பெரியார் என்போம் என்கிற வகையில் இந்த உறுதியேற்பு தொடங்கியது.  மத்தியசென்னை உறுப்பினர் தயாநிதி மாறன் உறுதிமொழியை வாசித்தபிறகு வாழ்க தமிழ், வாழ்க கலைஞர், வாழ்க பெரியார் என்று உணர்ச்சிகரமாக முழக்கமிட்டார். இது பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அடுத்துவந்த திமுக உறுப்பினர்களில் தர்மபுரி டாக்டர் செந்தில்குமார் கருப்புச்சட்டையுடன் வந்ததுடன், வாழ்க திராவிடம், வாழ்க பெரியார் என்று கூறினார்.

ஈரோடு கணேசமூர்த்தி எனது தாய்நாடு தமிழ்நாடு, தாயகத்தின் உரிமை காப்போம் என்று அதிரவைத்தார். திருமாவளவன் உறுதியேற்பின் போது வாழ்க அம்பேத்கர், பெரியார், வாழ்க ஜனநாயகம், சமத்துவம் என்றார். இந்திய ஜனநாயகக் கட்சி உறுப்பினர் பாரிவேந்தர் தமிழ் வாழ்க, இந்தியாவும் வாழ்க என்றார். கனிமொழி வாழ்க தமிழ், வாழ்க பெரியார் என்றார். சிபிஎம் உறுப்பினர் வெங்கடேசன் தமிழ் வாழ்க, மார்க்சியம் வாழ்க என்றார். சீனியர்களான டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் தமிழில் உறுதிமொழியை வாசித்ததோடு நிறுத்திக் கொண்டார்கள்.

காங்கிரஸ் உறுப்பினர்களில் திருநாவுக்கரசரும், கார்த்திக் சிதம்பரமும் கடவுளறிய உறுதிமொழி ஏற்பதாக கூறினர். அதிமுக உறுப்பினரான ரவீந்திரநாத் கடவுளறிய உறுதிமொழி ஏற்பதாக கூறியதுடன், வாழ்க எம்.ஜி.ஆர்., வாழ்க அம்மா, வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் என்று கூறி பாஜகவினரை பரவசப்படுத்தினார். பாஜக உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக மேஜைகளைத் தட்டினார்கள்.

மொத்தத்தில் பாஜக மேற்கொள்ளும் பிரிவினைவாத, மதவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள எங்களிடம் பெரியார் இருக்கிறார் என்று தமிழக எம்.பி.க்களில் பெரும்பாலானோர் பகிரங்கமாகவே பதிவு செய்து, பாஜகவை பதற்றமடையச் செய்திருக்கிறார்கள்.

 

 

 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.