Skip to main content

தவறான உறவால் நடந்த விபரீதம்... காதல் கணவனைக் கொன்ற மனைவி... வீதியில் நிற்கும் குழந்தைகள்!

Published on 18/05/2020 | Edited on 18/05/2020

 

 Cuddalore Fake love issue

 

2019 ஜூலை 12ஆம் தேதி கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஊமங்கலம் காவல் நிலையத்திற்கு ஒரு பரபரப்பான தகவல் வந்தது. மேற்கு இருப்பு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான முந்திரித் தோப்பில் எரிக்கப்பட்ட நிலையில் ஒரு மனித உடல் கிடக்கிறது. அது ஆணா? பெண்ணா? என்று கூடதெரியவில்லை. உடனே வரவும் இந்தத் தகவலையடுத்து ஊமங்கலம் போலீசார் பரபரப்போடு அந்த முந்திரி தோப்புக்குச் சென்றனர். உடனடியாக விழுப்புரம் தடய அறிவியல் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து அந்த உடலை ஆய்வு செய்து இறந்தது ஆண் உடல் என்பதை உறுதி செய்தனர். இப்படி உருக்குலைந்த நிலையில் கிடந்த அந்த ஆண் உடல் யாருடையது, இந்தக் கொலையை யார் செய்திருப்பார்கள், இப்படிப் பல்வேறு சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் விடை தெரியாத நிலையில் ஊ.மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
 


மாவட்ட எஸ்.பி. அபிநவ் உத்தரவின்படி, நெய்வேலி டி.எஸ்.பி. லோகநாதன் ஊ.மங்கலம் இன்ஸ்பெக்டர் சுஜாதா சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் உட்பட 9 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது கடந்த 10 மாதங்களாக அந்தத் தனிப்படை தீவிர புலன் விசாரணை செய்தும் கொலை வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை. யார் கொலையானவர்? கொலை செய்தவர்கள் யார்?  இந்தக் கேள்விகளையே ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். புலனாய்வில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் பற்றிய புகார் பதிவாகியுள்ளது சம்பந்தமாக ஒரு லிஸ்ட் எடுத்து அதை ஆய்வு செய்யுமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ் உத்தரவிட்ட, இதன்படி 22-7-2019 அன்று திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் எனது கணவரைக் காணவில்லை கண்டுபிடித்துத் தாருங்கள் என்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த  சுதா 34 வயது பெண் ஒருவர்  புகார் கொடுத்திருப்பது தெரியவந்தது. 
 

 Cuddalore Fake love issue


இந்தப் புகாரைத் தூசி தட்டி எடுத்த காவல்துறை ராமாபுரம் சென்று கணவர் காணாமல் போனதாகப் புகார் கொடுத்த சுதாவை விசாரணை செய்தது. அவர் கூறிய தகவல்களில் முரண்பாடுகள் இருப்பதை அறிந்த தனிப்படை சுதாவின் செல்போன் எண்ணிற்குக் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வந்த அழைப்புகள் முழுவதையும் ஆய்வு செய்தது. அதில் சுதாவும் சிவராஜ் என்பவரும் அதிகமுறை போனில் பேசி உள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுதா சிவராஜ் இருவரையும் தனித்தனியே வைத்து விசாரித்தனர். அதன்பிறகு சுதாவை ஊ.மங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து சுதாவிடம் போலீசார் விசாரணையில் தீவிரம் காட்டினார்கள். போலீசாரின் கிடுக்கிப்பிடி  விசாரணையில் சுதா கூறிய தகவல்கள் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசாரிடம் சுதாஅளித்த வாக்குமூலத்தில் முந்திரி தோப்பில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது எனது கணவர்தான். அவரை கொலை செய்ய காரணமாக அமைந்தது எனது முறைதவறிய என்று கூறியதோடு, தனது வாழ்க்கை பாதை முழுவதும் கூற ஆரம்பித்த அவர், "நானும் மேற்கு ராமாபுரத்தைச் சேர்ந்த சக்கரபாணி மகன் ஸ்ரீதரன் என்பவரும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம்.

எங்களுக்கு 13 வயதில் மோகன் ஒன்பது வயதில் பரணி என்ற 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். எனது கணவர் ஸ்ரீதரன் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், கல்லூரி பேருந்துகளின் நிர்வாக மேலாளராகப் பணி செய்து வருகிறார். அதற்காக அவர் கல்லூரியிலே தங்கிப் பணி செய்துவிட்டு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார். மற்ற நாட்களில் நானும் எங்கள் பிள்ளைகளும் வீட்டில் இருப்போம். அப்படி வீட்டுக்கு எனது கணவர் ஒரு முறைவரும்போது ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவரை தனது உதவிக்காக வைத்திருப்பதாகக் கூறி வீட்டுக்கு அழைத்து வைத்திருந்தார். பல முறை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.

கணவர் இல்லாத நேரத்தில் சிவராஜ் வீட்டுக்குத் தேவையானதை வாங்கி வந்து கொடுப்பார். எங்களுக்கும் பிள்ளைகளுக்கும் மிகவும் உதவியாக இருந்தார் சிவராஜ். மேலும் அடிக்கடி சிவராஜ் வீட்டுக்கு வந்து சென்ற நிலையில் எனது கணவரும் வாரத்துக்கு இரண்டு முறை மட்டுமே வீட்டுக்கு வருவதால் தனிமையில் இருந்த நான் சிவராஜோடு நெருக்கமாகப் பழகினேன். எங்களின் அந்த நெருக்கம் இருவருக்கும் இடையில் முறை தவறிய உறவாக மாறியது. கணவர் ஸ்ரீதரன் வேலைக்காகப் பெரம்பலூர் சென்றபிறகு பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு சிவராஜ் நான் இருவரும் எங்கள் வீட்டில் உல்லாசமாக இருப்போம். இது கொஞ்சம் கொஞ்சமாக அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தியது. என் கணவரிடமும் கூறியுள்ளனர். ஆனால் என் கணவர் என் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக அக்கம்பக்கத்தில் என்னைப்பற்றி தவறாகக் கூறியதை அவர் நம்பவில்லை.
 


இந்த நிலையில் கடந்த 10.7.2019 அன்று அதிகாலை 12 மணியளவில் எனது கணவர் ஸ்ரீதரன் பெரம்பலூரில் இருந்து திடீரென வீட்டுக்கு வந்துவிட்டார். அப்போது நானும் சிவராஜ் இருவரும் வீட்டில் தனியாக இருந்ததை என் கணவர் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் சிவராஜும் சேர்ந்து என் கணவரை வீட்டிலேயே அடித்துக் கொலை செய்தோம். பிறகு அவரது உடலை வீட்டில் மறைத்து வைத்திருந்து மறுநாள் இரவு எனது தங்கையின் காரில் ஸ்ரீதரன் உடலை ஏற்றிக் கொண்டு நானும் சிவராஜு யாருக்கும் தெரியாமல் இந்தக் கொலையை மறைக்க வேண்டும் உறவினர்களுக்கும் சந்தேகம் வரக்கூடாது என்று இருவரும் ஆலோசனை செய்தோம். இப்படி நீண்ட ஆலோசனையில் முடிவில் அந்த முந்திரி தோப்புக்குக் கொண்டு வந்தோம். ஏற்கனவே தயாராக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை அவர் உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்து எரித்த பின்னர் எங்களுக்கு ஒன்னும் தெரியாததுபோல் வீட்டுக்குச் சென்று விட்டோம்.

இந்த இந்நிலையில் என் மீது யாரும் சந்தேகப்படாமல் இருப்பதற்காக கடந்த 22-7-2019 அன்று கடலூர் திருப்பாப்புலியூர் காவல் நிலையத்திற்குச் சென்று எனது கணவரைக் காணவில்லை கண்டுபிடித்துத் தாருங்கள் எனப் புகார் கொடுத்தேன். 9 மாதத்துக்கு மேல் ஆகிவிட்டதால் இனிமேல் நம் மீது யாருக்கும் சந்தேகம் வராது, நாங்கள் கொலை செய்ததை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என நிம்மதியாக இருந்தோம். காவல்துறையினர் தீவிர விசாரணை செய்ததில் சிக்கிக் கொண்டோம்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இவரது தகாத உறவினர் சிவராஜை போலீசார் கைது செய்து அவரை தனியே வைத்து விசாரித்தனர். அவரும் இந்தக் கொலையை நாங்கள்தான் செய்தோம் என்று ஒப்புக்கொண்டார்.
 

http://onelink.to/nknapp


காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சுதாவுக்கு ஏற்பட்ட முறை தவறிய உறவின் சந்தோஷத்தில் காதல் கணவனையே கொலை செய்து அவரது உடலை கொடூரமான முறையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு எந்தவிதமான மன வருத்தமோ துக்கமோ இல்லாமல் சந்தோஷமாக 'தவறான உறவில்' தொடர்ந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார் என்பது விசாரணையின் முடிவில் உறுதியானது. கட்டிய கணவரைக் கொடூரமாகக் கொல்லும் அளவுக்குப் பாழாய்ப்போன 'முறை தவறிய உறவு' சுதாவின் கண்ணை மறைத்துவிட்டது. அவர்களின் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்கிறார்கள் அப்பகுதி மக்கள். 

 


 

 

சார்ந்த செய்திகள்