Skip to main content

சிவகங்கை அ.தி.மு.க. கலட்டா! அதகளமான பூத் கமிட்டி கூட்டம்! 

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Sivagangai admk booth committee meeting

 

"......தா.....டா' என்கின்ற தடித்த வார்த்தைகளும், "என்னையப் பத்தி பேசுறியா? கழுத்தை அறுத்துப் போட்டுவிடுவேன்' என்கின்ற வார்த்தைகளும் சர்வசாதாரணமாக கிடைக்கின்றது சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க.வினர் நடத்திவரும் பூத் கமிட்டி அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில்.

 

அடிப்படையிலிருந்து வந்தால்தான் கட்சியைப் பலப்படுத்த முடியும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றார் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி. இதன் ஒருகட்டமாக பூத் கமிட்டியில் என்னென்ன செய்ய வேண்டுமென ஆறு நிபந்தனைகளை விதித்து, அதற்காக மாவட்டந்தோறும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தினை நடத்தி வருகின்றது அ.தி.மு.க. அதனையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பூத் கமிட்டியினை தேர்வுசெய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இதற்காக பூத் கமிட்டி பொறுப்பாளருக்கான மேலிட பார்வையாளராக கழக அமைப்புச் செயலாளரான ராதாபுரம் சீனிவாசனை நியமித்தது மாநிலத் தலைமை.

 

சம்பவம் 1:


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 334 பூத் கமிட்டிகளுக்கான பொறுப்பாளர்களை நியமிப்பதற்காக, அதே சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 84 மாவட்ட பொறுப்பாளர்களை கொண்டு அச்சுக்கட்டுப் பகுதியிலுள்ள தனியார் ஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மேலிடப் பார்வையாளராக நியமிக்கப்பட்ட ராதாபுரம் சீனிவாசன், மா.செயலாளரும் சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன், மாவட்ட அவைத்தலைவர் ஏவி. நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. உமாதேவன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட நிலையில், ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. 

 

Sivagangai admk booth committee meeting

 

இதில், "அ.தி.மு.க. தொண்டனின் பணி, புனிதப்பணி.. இந்த பணியை நாம் செய்து மீண்டும் எடப்பாடியாரை ஆட்சியில் அமர்த்த வேண்டும்'' என நிர்வாகிகளிடம் வேண்டுகோள் வைத்தார் மா.செ. செந்தில்நாதன். அடுத்து மைக் பற்றிய ராதாபுரம் சீனிவாசனோ, "இந்த பூத் கமிட்டியை நிர்வாகிகளாகிய நீங்கள் வலுவாகவும், அர்ப்பணிப்போடும் அமைத்துக் கொடுத்தால் அ.தி.மு.க.வை யாராலும் வெல்ல முடியாது, இரட்டை இலைக்கு யார் விசுவாசமாக இல்லையோ அவர்களை எந்த பூத் கமிட்டியிலும் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என புரட்சி தமிழர் எடப்பாடியார் கட்டளையிட்டுள்ளார்'' என்றார்.

 

இந்நிலையில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கட்சியில் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. உமாதேவனோ, "இந்த பூத் கமிட்டி விஷயத்தை முன்னரே செய்திருந்தால் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியை நாம் இழந்திருக்க வாய்ப்பில்லை. இங்கு ஆளும் கட்சியினரோடு நம்ம அ.தி.மு.க. கட்சிக்காரங்க லிங்க் வைத்திருப்பதால் தோல்வி கிடைக்குது. இப்பகூட பாருங்க, சிங்கம்புணரி சேர்மன் விளம்பரத்துல அமைச்சரோட படத்தைப் போட்டு விளம்பரப்படுத்துறாங்க. அது தேவையில்லாத ஒன்று'' என காட்டமாக உரையாற்றிவிட்டு உட்கார்ந்தார்.

 

இதற்கு விளக்கம் கொடுப்பதற்காக எழுந்த மா.செ. செந்தில்நாதனோ, "இப்படி அத்தனை பேரு முன்னால் பேசியதை தவிர்த்திருக்கலாமே? இங்கு யாரும் யாரோடும் லிங்கில் இல்ல'' என்றதுதான் தாமதம், சட்டென எழுந்த உமாதேவனோ, "நேரிடையாக சொல்றேன். உன்னையத்தான் சொல்றேன். உன்னுடைய உள்ளடி வேலைகளால் அசோகனும், மருது அழகுராஜூம் தோற்றது தெரியாதா என்ன?'' என பதிலுக்கு எகிற, அந்த இடமே அதகளமானது. "வெளியே போடா! வெளியே போடா!' என உமாதேவனுக்கு எதிராக குரல் அதிகரித்த நிலையில், தடித்த வார்த்தைகள் இரு தரப்பிலும் அதிகரித்தன. இதில் சிங்கம்புணரி சேர்மன் தரப்பினை சேர்ந்தவர்கள் உமாதேவனின் காரை எட்டி மிதித்ததாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து கருத்தறிய முன்னாள் எம்.எல்.ஏ உமாதேவனை தொடர்புகொண்டோம். பதிலில்லை. மா.செ. சார்பில் பேசியவர்களோ, "நல்லபடியாக சென்று கொண்டிருந்த கட்சியில் குழப்படி உருவாக்கவே வந்திருக்கின்றார் உமாதேவன். ஒவ்வொரு நாளைக்கும் ஒரு கட்சி என்ற நிலையில் இப்பொழுது திருப்பத்தூர் சட்டமன்றத்தினை குறிவைத்து வந்திருக்கின்றார். அதற்காகத்தான் இந்தப் பேச்சு. திருப்பத்தூர் சட்டமன்றத்தில் தி.மு.க.வோடு லிங்க் இருந்தால் சிங்கம்புணரி சேர்மன் பதவியை நாங்கள் எப்படி கைப்பற்ற முடியும்..?'' என்கின்றனர் அவர்கள்.

 

சம்பவம் 2:


முந்தைய நாள் திருப்பத்தூரில் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், மறுநாள் காரைக்குடி நகரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட மா.செ. செந்தில்நாதன், மேலிட பார்வையாளர் ராதாபுரம் சீனிவாசன் உள்ளிட்டோர் பொறுப்பாளர் கமிட்டிக்கான ஆலோசனைகளை வழங்கி புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில், "டேய்... நீதான் ஐயப்பனா..? ................என்கிட்ட பேசமாட்டியா..? மேலிடப் பார்வையாளரிடம்தான் பேசுவியா..?'' என தடித்த வார்த்தைகளால் காரைக்குடி நகர 2வது வார்டினைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளரான ஐயப்பனை அனைவரது முன்னிலையில் எகிறியிருக்கின்றார் காரைக்குடி ந.செயலாளரான மெய்யப்பன். "நீங்க கட்சியை நடத்துற லட்சணம் தெரியும். அதுதான் நேரடியாக மேலிடப் பார்வையாளரிடம் பேசினேன்'' என்றிருக்கின்றார் ஐயப்பன்.

 

Sivagangai admk booth committee meeting

 

மா.செ. செந்தில்நாதனும், மேலிடப் பார்வையாளரும் தேமே என்று பார்க்க மீண்டும், "எவனிடம் சொல்லியும் என்னை ......முடியாதுடா... இங்கேயே கழுத்தை அறுத்துப் போட்டுருவேன்'' என எகிறிய நகர செயலாளர் மெய்யப்பனை அமைதிப்படுத்தியிருக்கின்றனர் அருகிலிருந்தவர்கள்.

 

பத்து வருடங்களாக மா.செ. பதவி வகித்துவரும் செந்தில்நாதனை இச்சம்பவங்கள் அசைத்துப் பார்த்திருக்கின்றன என்பதுதான் நிஜம்.

 

-நா.ஆதித்யா


படங்கள்: விவேக்

 

 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.