Skip to main content

“அமித்ஷா பேசும்போது வெட்கமே இல்லாமல் ஆர்.பி. உதயகுமார் உட்கார்ந்திருக்கிறார்” - புதுமடம் ஹலீம்

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

 Pudhumadam Haleem  talk about annamalai and admk

 

அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்த தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம்.

 

“பாஜக நடத்திய வேல் யாத்திரை என்பது எவ்வளவு காமெடியாக இருந்தது என்பதை அனைவரும் பார்த்தோம். வேல் யாத்திரையால் தான் 4 தொகுதிகளில் வென்றது போல் எல்.முருகன் பேசியுள்ளார். ஆனால் அந்த தேர்தலில் அவரும் தோற்றார், அண்ணாமலையும் தோற்றார். பாரதத் தாய்க்கு இவர்கள் கொடுத்த மரியாதையை நாம் மணிப்பூரில் பார்த்தோம். இப்போது அவர்கள் மதவாத அரசியலைத் தாண்டி, மொழி அரசியலைக் கையில் எடுத்துள்ளனர். தமிழ் மொழிக்கு இவர்கள் தான் நிறைய செய்தது போல் பேசுகின்றனர். 

 

திருக்குறளை இவர்கள் தான் உலகெங்கும் கொண்டுபோய் சேர்த்தது போல் பொய் சொல்கின்றனர். திருக்குறள் உலகளவில் பேசப்படும் நூலாக எப்போதுமே இருந்திருக்கிறது. முதலில் மோடியும் அமித்ஷாவும் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழுக்கு இவர்கள் ஒதுக்கிய நிதி என்பது சில கோடிகள் தான். இந்தியில் இன்றுவரை திருக்குறள் மொழிபெயர்க்கப்படவில்லை. தமிழ்நாட்டில் இவர்களால் திராவிட அரசியல் பேச முடியாது, மத அரசியல் செல்லுபடியாகவில்லை. அதனால் தான் மொழி அரசியல் பேசுகின்றனர்.

 

தமிழ் மொழிக்கு உண்மையிலேயே யார் அதிகம் செய்தது என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும். அண்ணாமலை யாத்திரை செல்லும் கேரவன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் போல் இருக்கிறது. ராகுல் காந்தி பயன்படுத்திய கேரவன் சாதாரணமான ஒன்றாக இருந்தது. வாரிசு அரசியல் குறித்து அமித்ஷா இங்கு பேசுகிறார். பாஜகவில் பல வாரிசுகள் பல்வேறு பதவிகளில் இருக்கின்றனர். அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கிறார். அவர் எப்போதாவது கிரிக்கெட் விளையாடியிருக்கிறாரா? அவருக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்?

 

அண்ணாமலையின் யாத்திரை தொடக்க விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. அன்புமணி கலந்துகொள்ளவில்லை. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் திட்டங்களை அண்ணாமலை கொண்டுபோய் சேர்ப்பார் என்று அமித்ஷா பேசுகிறார். இதைக் கேட்டுக்கொண்டு ஆர்.பி.உதயகுமார் வெட்கமில்லாமல் அங்கு உட்கார்ந்திருந்தார். இது அதிமுக தொண்டர்களை அவமானப்படுத்தும் செயல். மணிப்பூர் விவகாரம் இன்று சர்வதேச அளவில் சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இவர்கள் இங்கு சட்ட ஒழுங்கு பற்றி பேசுகின்றனர். இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

 

செந்தில் பாலாஜி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடந்த விஷயத்துக்காகத் தான். குற்றமே நிரூபிக்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜி குற்றவாளி என்று அமித்ஷா பேசுவது எந்த விதத்தில் சரி? ஒரு நாளைக்கு வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் நடப்பதும், ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கும் பெயர் யாத்திரையா? சாதாரண மனிதர்கள் கூட தினமும் இதைவிட அதிகம் நடக்கின்றனர். ராகுல் காந்தி நடத்தியது தான் உண்மையான யாத்திரை. அண்ணாமலை செய்வது ஒரு அரசியல் ஸ்டண்ட். தமிழ் மக்களிடம் இது எடுபடாது” என்றார்.

 

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.