Skip to main content

காலா பேசிய நில உரிமை -தமிழகத்தில் பலியான உயிர்கள்

Published on 13/06/2018 | Edited on 13/06/2018

நெடுநாளாக பேச்சிலும் போராட்டத்திலும் இருக்கும் நில உரிமை என்ற முழக்கத்தை மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறது 'காலா' திரைப்படம். தமிழ்நாட்டில் விடுதலைக்கு முன்பே அரசு இதற்கான நடவடிக்கையை எடுத்தது. ஆனால், அது முழுமையாக பலனளிக்காமல் ஆதிக்க சக்திகள் பார்த்துக்கொண்டன.   

 

panjami land


 

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசால் ஒதுக்கப்பட்ட விளைநிலங்கள்தான் பஞ்சமி நிலங்கள். செங்கல்பட்டின் ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் ட்ரெமென்கீர் அந்தப் பகுதியில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்களைப் பற்றி ஒரு அறிக்கையை தயார்செய்து 1891ல் ஆங்கிலேயே அரசுக்கு அனுப்பிவைத்தார். அதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலம் வழங்குவதன்மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்று குறிப்பிட்டிருந்தார். 1892, மே16ல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்த விடயம் விவாதத்திற்கு வந்தது. அதனைத்தொடர்ந்து செப்டம்பர் 1892 30ல் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா முழுவதிலும் 12.5 இலட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பட்டியலின மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அப்போதைய சென்னை மாகாணத்தில் மட்டும் இரண்டு இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டது. 

 

 

 

இந்த நிலங்களை ஆதி திராவிடர் அல்லாதோர் பயன்படுத்த முடியாதபடி சட்டம் வடிவமைக்கப்பட்டது. அதன்படி, குறைந்தது இந்த நிலத்தில் விவசாயம் செய்தோ, வீடு கட்டியோ பயன்படுத்தவேண்டும். அதன்பின்தான் இந்த நிலங்களை பிறருக்கு விற்க முடியும். அதிலும் இந்த நிலத்தை அதே இனத்தைச் சேர்ந்தவர்களுக்குதான் விற்க முடியும். இந்த சட்டம் கொண்டுவந்ததன் முக்கிய காரணம் அவர்களை ஏமாற்றி யாரும் நிலங்களை அபகரித்துவிடக்கூடாது என்பதற்காகதான். அப்படி யாரும் பத்திரப்பதிவிற்காக வந்தால் பத்திரப்பதிவாளர் அதிலுள்ள வில்லங்கத்தைக்கூறி பத்திரப்பதிவிற்கு தடைவிதிக்கவேண்டும். இப்படி சட்ட ரீதியான தடைகள் வலிமையாக இருக்கின்றன, ஆனால் ஆட்சியாளர்கள் அதை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

 

panjami land


 

அதனால்தான் காலங்காலமாக பலர் அந்த மக்களை ஏமாற்றி அவர்களது நிலங்களை அபகரித்துவந்தனர். இன்றும் பல பஞ்சமி நிலங்கள் மற்றவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட பாதி நிலங்கள் ஆக்கிரமிப்பிலேயே இருக்கிறது. ஆதிதிராவிடர் நலத்துறையும்  வருடாவருடம் மீட்கிறோம் என்று கூறிக்கொண்டே வருகிறது.

 

 

 

ஜாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேறச் செய்வதற்காக ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த திட்டம்தான் பஞ்சமி நிலச் சட்டம். ஆனால் அந்த நிலங்களையும் பிடுங்கிக்கொண்டனர். சிலர் நிலத்தின் மதிப்பறியாமல் மிகக் குறைந்த விலைக்கு சட்டத்திற்கெதிராக விற்றனர்.  அதை எதிர்த்து  போராட்டத்தில் ஈடுபடுபட்டவர்கள் கொல்லப்பட்டனர். 1994 அக்டோபர் 10ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டம் நடைபெற்றது. அப்போதிருந்த ஜெயலலிதா அரசு துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது. தற்போது ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்ததுபோலவே அப்போதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஜான்தாமஸ், ஏழுமலை ஆகிய செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர். ஜான் தாமஸ் என்ற நில மீட்புப் போராளியின் தொண்டையில் குண்டு பாய்ந்தது. பலர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

 

 

 

இன்றும் பஞ்சமி நில மீட்புக்காக பல்வேறு இயக்கங்கள் போராடி வருகின்றன. வெற்றி எவ்வளவு தூரம் என்பது தெரியவில்லை.


 

 

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.

Next Story

சோளக்காட்டில் பதுக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கி; 2 பேருக்கு போலீசார் வலை

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

A country gun hidden in a cornfield; Police net for 2 people

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி அடுத்த ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக சோளக்காடு ஒன்று உள்ளது. ரமேஷ் தினமும் சோளக்காட்டில் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து பார்வையிடுவது வழக்கம். அதேபோல் சம்பவத்தன்று ரமேஷ் தனது சோளக்காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரியூர் - மல்லியம்மன் செல்லும் நடைபாதையில் காலணித் தடங்கள் இருந்தன. இதையடுத்து ரமேஷ் அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு பகுதியில் நாட்டுத் துப்பாக்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  

 

மேலும் அந்தப் பகுதியில் பாத்திரங்களும் இருந்தன. இதுகுறித்து ரமேஷ் கடம்பூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில், யாரோ மர்ம நபர்கள் ரமேஷின் காட்டில் நாட்டுத் துப்பாக்கியைப் பதுக்கி வைத்து வேட்டைக்குச் செல்லும்போது பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடம்பூர் போலீசார் ரமேஷ் காட்டை ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது நாட்டுத் துப்பாக்கியைத் தேடி அதே பகுதியைச் சேர்ந்த வேட்டையன்(62), ராமர் (39) ஆகியோர் வந்தனர். அவர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

 

போலீசார் விசாரணையில் வேட்டையன், ராமர் அவர்களது நண்பர்கள் மேலும் இரண்டு பேர் சேர்ந்து வேட்டையாடுவதற்காக ரமேஷ் சோளக்காட்டில் நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்தது தெரியவந்தது. வேட்டைக்குச் செல்லும் இவர்கள் மிருகங்களை வேட்டையாடி சோளக்காட்டில் கொண்டு வந்து அவற்றை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதற்காக காட்டில் பாத்திரங்களையும் வைத்திருந்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேட்டையன், ராமர் இருவரையும் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.