Skip to main content

கைது செய்த கமிஷனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கலைஞர்! 

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

Kalaignar gave posting to commissioner who arrested him

 

நள்ளிரவில் வீடுபுகுந்து, முரட்டுத்தனமாக கலைஞரை கைது செய்த சென்னை கமிஷனர் முத்துக்கருப்பனை, கலைஞர் கையாண்ட விதம் மிகவும் வித்தியாசமானது.

 

ஜூன் 30ம் தேதி 2001 ஆண்டு ஒட்டுமொத்த தமிழகமும் பரபரத்துக் கிடந்தது. இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கைது செய்யப்பட்ட நாள். இந்தியாவே கொந்தளித்தது. கலைஞர் கைதுசெய்யப்பட்ட வீடியோ காட்சிகள், அடிக்கடி தொலைக்காட்சியில் போட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 

கலைஞர் கைதுக்கு மிக ரகசியமாக நாள் குறிக்கப்பட்டது. அப்போதைய சென்னை கமிஷனர் முத்துக்கருப்பன், டி.ஜி.பி.ரவீந்திரநாத், சி.பி.சி.ஐ.டி. டிஐஜி முகமது அலி ஆகியோருக்கு மட்டுமே கைது செய்யப்போகும் சமாச்சாரம் தெரியும். நள்ளிரவு நேரத்தில் கலைஞர் கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். திடீரென வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்த போலீசார், கைது செய்ய வந்திருப்பதாக, கலைஞரிடம் கூறினர். நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யவேண்டிய அவசியம் என்னவென புரியாமல் இருந்தார் கலைஞர். ஆனால், அவருக்கு யோசிக்கக் கூட போலீசார் நேரம் கொடுக்கவில்லை. லுங்கியுடனே கலைஞர் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார். 

 

Kalaignar gave posting to commissioner who arrested him

 

அதன்பிறகு, என்ன நடந்தது என்பதை நாடே அறியும். இதில், கவனிக்கவேண்டியது, கலைஞர் கைது செய்யப்பட்டபோது சென்னை கமிஷனர் முத்துக்கருப்பன் நடந்துகொண்ட விதம்தான். முன்னாள் முதல்வர், முதுபெரும் தலைவர், பழுத்த அரசியல்வாதி என எதையுமே அவர் யோசிக்கவில்லை. தனக்கு கொடுக்கப்பட்டிருந்த வேலையை வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்பதிலேயே அவர் குறியாக இருந்தார். இந்த மூர்க்கத்தனமான கைதுக்கு பிறகு, அவருக்கு அதிமுக ஆட்சியில் ராஜமரியாதை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுடன் முத்துக்கருப்பனுக்கு மனக்கசப்பு அதிகரித்தது. விளைவு, 2003ம் ஆண்டு முத்துக்கருப்பனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார் ஜெயலலிதா. 2006ல் ஜெயலலிதா ஆட்சிக்கு முடிந்து மீண்டும் கலைஞர் முதல்வரானார்.

 

Kalaignar gave posting to commissioner who arrested him
கமிஷனர் முத்துக்கருப்பன்

 

எல்லோரும் முத்துக்கருப்பனை கலைஞர் பணிநீக்கம் செய்வார் என எதிர்பார்த்தனர். ஆனால், கலைஞர் அவரையும் கைதுக்கு காரணமான மற்ற அதிகாரிகளையும் சட்டைசெய்யவில்லை. பின்னர் ஒருநாள், முதல்வர் கலைஞரை, ஜெயலலிதாவால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முத்துக்கருப்பன் சந்தித்துப் பேசினார். அது வெறும் சந்திப்பல்ல, கண்கள் பணிக்க மனக் குமுறல்களை கொட்டித் தீர்த்தார் முத்துக்கருப்பன். கலைஞர் எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டார். எந்த உத்திரவாதமும் கலைஞர் கொடுக்காதது, முத்துக்கருப்பனை மேலும் கலக்கத்தில் தள்ளியது. சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2008ம் ஆண்டு முத்துக்கருப்பனை மீண்டும் பணியில் சேர்த்துக்கொண்டார் கலைஞர்.

 

Kalaignar gave posting to commissioner who arrested him
டி.ஜி.பி. ரவீந்திரநாத்

 

ஆம், தனது கைதின்போது முரட்டுத்தனமாக நடந்துகொண்ட முத்துக்கருப்பனுக்கு, கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமைக் கண்காணிப்பு அதிகாரி பதவியை வழங்கினார் கலைஞர். இது கலைஞரின் தலைமைப் பண்புக்கும் பெருந்தன்மைக்கும் உதாரணமாக இருந்துவருகிறது. மேலும், கலைஞரின் கைதில் தொடர்புடைய இன்னொரு அதிகாரியான சிபிசிஐடி டிஐஜி முகமது அலி, பின்னாட்களில் முத்திரைத் தாள் மோசடி வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்றது வரலாறு. மற்றொரு அதிகாரியான டி.ஜி.பி. ரவீந்திரநாத், இளம்பெண்களை செல்போனில் படம்பிடித்ததாகவும் லஞ்சம் வாங்கியதாகவும் சர்ச்சையில் சிக்கி, சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். பின்னாட்களில் பலமுறை ராஜினாமா கடிதம் எழுதி புகழ்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

கலைஞர் சிலை திறப்பு விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Minister Anbil Mahesh invites kalaignar Statue Unveiling Ceremony in trichy

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணப்பாறையில் இன்று (01-03-24) முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, கலைஞரின் உருவச்சிலையை  திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் இதுவரை 90 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 91-வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் இன்று (01-03-24) மாலை 3.30 மணிக்கு மணப்பாறை மாட்டுச்சந்தை அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைக்க உள்ளார். இந்த விழா கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.