Skip to main content

ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும்

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

Change and Background of Collectors

 

தி.மு.க. ஆட்சியில் பெரிய பிரச்சினையாக அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மோதல் உருவெடுத்துள்ளது.

 

திருநெல்வேலி கலெக்டராக இருந்தவர் விஷ்ணு. இவர் திருநெல்வேலியில் உள்ள சட்டவிரோத குவாரிகள் மேல் நடவடிக்கை எடுத்தார். இதனால் பாதிக்கப்பட்ட குவாரி அதிபர்கள் ஆளுங்கட்சி முக்கியப் புள்ளிகளை அணுகினார்கள். அந்த முக்கியப் புள்ளி நேரடியாக கலெக்டர் விஷ்ணுவுக்கு குவாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என அழுத்தம் கொடுத்தார். விஷ்ணு அதற்கு உடன்படவில்லை. ஆட்சியின் மேலிடத்திலும் விஷ்ணு மேல் புகார் கொடுத்தார். அவரின் அனைத்து தந்திரங்களையும் முறியடித்த கலெக்டர் விஷ்ணு, சட்டவிரோதமாக விதிமுறைகளை மீறி நூற்றுக்கணக்கான அடி ஆழத்தில் வெட்டி எடுக்கப்படும் கற்களால் ஏற்கனவே அந்த பகுதியில் உயிரிழப்பு நடந்துள்ளது. எனவே, இதை நாம் தமிழர் கட்சி அரசியலாக்குகிறது என நோட் போட்டு சட்டவிரோதமாக இயங்கிய குவாரிகளுக்கு 360 கோடி ரூபாய் அபராதம் விதித்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்கள் குவாரி அதிபர்கள். நோட்டீஸ் கொடுக்காமல் குவாரி மீது நடவடிக்கை எடுத்தது தவறு என வழக்கில் தீர்ப்பு வந்தது. உடனடியாக நோட்டீஸ் கொடுத்துவிட்டு அதே குவாரிகளை மூட உத்தரவிட்டார் விஷ்ணு.

 

விஷ்ணு கலெக்டராக தொடர்ந்தால் நாங்கள் தொழில் நடத்த முடியாது என குவாரி அதிபர்கள் ஆட்சி மேலிடத்திடம் முறையிட, சமீபத்தில் நடந்த கலெக்டர்கள் மாற்றத்தில் விஷ்ணு மாற்றப்பட்டார். விஷ்ணுவை போலவே பொதுமக்களிடம் நன்மதிப்பு பெற்றவர் தென்காசி கலெக்டராக இருந்த ஆகாஷ். இவர் குற்றாலம் பகுதியில் மிகப்பெரிய சுற்றுலா விழாக்களை மக்கள் ஒத்துழைப்போடு பிரம்மாண்டமாக நடத்தினார். அத்துடன் குற்றாலத்திலிருந்து கால்வாய் வெட்டி தங்களுடைய தனியார் ரிசார்ட்டுகளில் செயற்கை அருவிகளை ஏற்படுத்திய ஓட்டல் அதிபர்களின் சட்டவிரோத வேலைகளுக்கு முடிவு கட்டி செயற்கை அருவிகளை இழுத்து மூடினார். அத்துடன், தலையாரி போஸ்டிங்குகளை வெகு வேகமாக எந்தவித அரசியல் அழுத்தங்களுக்கும் அசைந்து கொடுக்காமல் நேர்மையாக நிரப்பினார். இது தென்காசி தி.மு.க. அரசியல்வாதிகளை கொதிப்படையச் செய்துள்ளது. இந்த கலெக்டர் ஆகாஷையும் நடைபெற்ற கலெக்டர்கள் மாற்றத்தில் மாற்றினார்கள். அவருக்குப் பதிலாக டி.ரவிச்சந்திரன் என்பவரை தென்காசி கலெக்டராக நியமித்தார்கள். இதை எதிர்த்து தென்காசி மக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள்.

 

கிருஷ்ணகிரி எஸ்.பி.யாக இருப்பவர் கிருஷ்ண சரோஜ் தாகூர். சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்தது போல சூளகிரி அருகே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுகூடி சாலைமறியலில் ஈடுபட்டார்கள். அதில் ஒரு இளைஞரை கிருஷ்ண சரோஜ் தாகூர் லத்தியாலும் காலாலும் எட்டி உதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. எருது விடும் விழாவுக்கு முறையாக அனுமதி தரவில்லை என இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஜல்லிக்கட்டு, கள்ளக்குறிச்சி போல பரபரப்பாக போலீசுக்கு எதிராக சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையை மணிக்கணக்காக மறித்து நடந்த இந்தப் போராட்டம், சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது. கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் போலவே நூற்றுக்கணக்கான இளைஞர்களை கைது செய்து கண்ணீர் புகைக்குண்டு வீசி தடியடி நடத்தி இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

 

இந்த கிருஷ்ண சரோஜ் தாக்கூர் தமிழகத்திலேயே மிகச்சிறந்த சட்டம் ஒழுங்கு அதிகாரி என காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகளால் பாராட்டப்படுபவர். ஆனால், இவர் எப்பொழுதும் சட்டம் ஒழுங்கு பணிகளை ஒழுங்காகக் கவனிப்பதில்லை. சூளகிரியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரளுவார்கள். அவர்கள் எருது விடும் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் சாலைமறியலில் ஈடுபடுவார்கள் என்பதை கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் போலவே உளவுத்துறை கவனிக்கத் தவறியது. இது உளவுத்துறையின் தோல்வி என அறிக்கை விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இவ்வளவு பெரிய சட்டம் ஒழுங்கு தோல்விக்குப் பிறகும் கிருஷ்ண சரோஜ் தாக்கூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

துரைமுருகனுக்கும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் பகுதி கலெக்டர்களுக்கும் ஒத்து வராது. சமீபத்தில் இந்தப் பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற முதல்வர், இந்தப் பகுதி கலெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார் என்கிற புகார் தலைமைச் செயலக வட்டாரங்களில் எழுந்துள்ளது. அதேநேரத்தில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு மெடிக்கல் சேல்ஸ் கார்ப்பரேஷன் தலைவராக இருந்தவர் உமாநாத் ஐ.ஏ.எஸ்.. இவர் இப்பொழுது முதல்வரின் செயலாளராக இருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதாரத்துறையில் கடுமையான ஊழல்களைச் செய்தார் என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஆட்சிக்கு வந்த பிறகு அந்தத் துறையில் இருந்த உமாநாத் முதல்வரின் செயலாளராக வந்துவிட்டார். இதுவரை விஜயபாஸ்கர் மீது உமாநாத் தலைவராக இருந்த தமிழ்நாடு மெடிக்கல் சேல்ஸ் கார்ப்பரேஷனில் நடந்த ஊழல்கள் பற்றி ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. தற்பொழுது நடைபெற்ற கலெக்டர்கள் மாற்றத்தில் அரவிந்த் என்பவரை தமிழ்நாடு மெடிக்கல் சேல்ஸ் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநராக உமாநாத் நியமித்துள்ளார்.

 

இதுதான் ஊழலை மறைக்கும் நடவடிக்கை என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். நியாயமாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். தவறான அதிகாரிகள் பாராட்டப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசியல்தான் என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.