Skip to main content

கிராம மக்களை காக்க தவறிய அரசு : ஆற்றில் மூங்கில் பாலம் அமைத்த இளைஞர்கள்!

Published on 10/07/2018 | Edited on 10/07/2018

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜெயங்கொண்டப்பட்டினம் ஊராட்சியில் அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், திட்டுகாட்டூர், கீழகுண்டலபாடி கிராமங்கள் உள்ளது. இது ஜெயங்ககொண்டப்பட்டினம் - அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம் கிராமத்திற்கு இடையே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றின் அக்கரையில் உள்ளது. இந்த கிராமத்தில் 1800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
 

 

 

இயற்கை வளம் உள்ள இந்த கிராமத்தில் உள்ள மக்கள் ஊரைவிட்டு வெளியே வரவேண்டும் என்றால் கொள்ளிடம் ஆற்றை கடந்து தான் வரவேண்டும். ஆற்றில் குறைவாக தண்ணீர் இருந்தால் அனைவரும் ஆற்றில் இறங்கி வந்துவிடுகிறார்கள். மழைகாலங்களில் தண்ணீர் அதிகமாக செல்லும் போது 5 கீ.மீ தூரம் சுற்றிகொண்டு பெராம்பட்டு கிராமத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் வழியாக வெளியுலகிற்கு சென்று வருகிறார்கள்.
 

மேலும் இந்த கிராமத்தில் இருந்து மாணவ, மாணவிகள் ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு வரவேண்டும் என்றாலும் துணிகளை கையில் எடுத்துகொண்டு ஆற்றில் இறங்கி கரைக்கு வந்து துணிகளை போட்டுகொண்டு பள்ளிக்கு சென்று வருகிறார்கள். கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் பல உள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆற்றில் இறங்கி செல்லும் போது உயிரை கையில் பிடித்து செல்வது போல் தினம் தினம் உயிர் பயத்தில் சென்று வருகிறார்கள். முதலைகளிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் இறங்கி நடந்து வரும் போது கையில் குச்சியை வைத்துக்கொண்டு தண்ணீரை அடித்தவாறு சத்தமிட்டுகொண்டு ஆற்றை கடந்து சென்று வருகிறார்கள்.
 

 

 

ஜெயங்கொண்டபட்டினத்திற்கும் - அக்கரைஜெயங்கொண்டபட்டினத்திற்கும் இடையே கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் சிமெண்டால் தரைபாலம் அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் இந்த பாலம் அடித்துசென்றுவிட்டது. அதன் பின்னர் பாலம் அமைத்து தரக் கோரி குமராட்சி வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடமும், ஆட்சியாளர்களிடமும் வலியுறுத்தி மனுகொடுத்துள்ளனர்.

ஆனால் அரசு அதிகாரிகள் இதனை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை. இதனால் அரசின் மீது விரக்தி அடைந்த அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் கிராமத்தில் உள்ள மக்களிடம் ரூபாய் 25 ஆயிரம் நிதி திரட்டி மூங்கில் கழியால் தற்காலிக பாலம் அமைத்துள்ளனர். இளைஞர்களின் செயல்பாட்டை அந்த கிராம மக்கள் மட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
 

இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி (27) என்ற பெண் கூறுகையில், நான் சின்னபிள்ளையாக இருந்தபோது ஆற்று தண்ணீரில் இறங்கி தான் கிராம மக்க போய் வந்தாங்க. அதன் பிறகு தரை பாலம் போட்டாங்க. அதுவும் தண்ணீல அடிச்சுட்டு போயிடுச்சு. அதன் பிறகு 10 வருஷசத்துக்கு மேல அரசிடம் பாலம் கட்டிதரகோரி மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. அதனால் ஆத்துல தண்ணீர் கொஞ்சமா இருக்கும் போது இறங்கி போவோம். முதலை எப்ப கடிக்குமோ என்ற பயத்திலேயே போவோம்.

எங்க ஊரில் இயற்கை முறையில் காய்கறிகளை விளைய வைத்தோம். எங்க ஊரில் விளையும் காய்களுக்கு தனி மவுசு இருக்கும். விளைந்த காய்கறிகளை எடுத்து செல்ல சரியான வழி இல்லாததால் விவசாயிகள் காலை 5 மணிக்கு காய்கறிகளை தலையில் தூக்கிகொண்டு ஆற்றில் இறங்கி சென்று சிதம்பரம், கொள்ளிடம் பகுதியில் வித்துட்டு வருவாங்க.

இப்படி இயற்கை வளமிக்க எங்க ஊரில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பாக மாறியுள்ளது. குடிக்க 4 கி.மீ தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஊரில் ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. அதில் உப்பு தண்ணீயை தான் ஏற்றி கொடுக்கிறார்கள். உப்பு தண்ணீரால் அந்த குடிநீர் தொட்டியும் பழுதடைந்து எப்ப இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது.

கடல் நீர் உட்புகுவதற்கு அரசின் மெத்தனபோக்கு தான் காரணம் இந்த பகுதியில் உள்ள மக்கள் உப்புநீர் புகாமல் இருக்க கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டகோரி பலகட்ட போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் அரசு தடுப்பணை கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்க ஊர் வாழ்வாதரத்தை இழந்து குடி தண்ணீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தில் குடிநீர் கிடைக்கவும், உடனடியாக காங்கிரீட்சிமண்ட் பாலம் அமைத்து தரவேண்டும் என்றார்.
 

 

 

இதுகுறித்து குமராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியனை தொடர்பு கொண்டு கேட்ட போது, நான் வந்து சில மாதங்கள் தான் ஆகிறது. அதற்கு முன் மனு கொடுத்தார்களா? என்று தெரியவில்லை. தற்போது நாங்கள் அனைவரும் வேலைநிறுத்த போராட்டத்தில் உள்ளோம். நான் அலுவலகம் வந்தவுடம் அதுகுறித்து மனு உள்ளதா? என்று பார்கிறேன் என்றார்.

 

 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.