Skip to main content

'அண்ணாவின் தம்பி... கலைஞரின் அண்ணன்' அவர்தான் பேராசிரியர் அன்பழகன்!

Published on 19/12/2019 | Edited on 05/03/2020


கிட்டதட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு அதுஒரு பொன்மாலைப் பொழுது, சூரியன் ஓய்வுக்காக தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்த அந்த நேரத்தில், சூரியனை ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு அந்த தலைவனுக்கு இருந்தது. அதற்காக அந்நேரம் தன்னுடைய தளபதிகளை தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தார் அந்த தலைவன். தலைவனுக்கு தளபதியாக வந்து சேர்ந்தார் இராமையா என்ற இளைஞர். தனக்கான தன்னுடைய தளபதிகளை தேடிக்கொண்டிருந்த அந்த தலைவன் வேறு யாருமல்ல. தமிழர்களின் குருதியோடு கலந்துள்ள பேரறிஞர் அண்ணாதான் அவர். அவர் தேர்தெடுத்த அன்பு தம்பிதான் இராமையா என்று அழைக்கப்பட்டு, இன்று நம் எல்லோராலும் பேராசிரியர் என்று அன்போடு அழைக்கப்படும் க. அன்பழகன் அவர்கள். இன்றைக்கு அவர் தன்னுடைய 98-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். கிட்டதட்ட எட்டு முறைக்கு மேல் சட்டமன்ற உறுப்பினர், சட்ட மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், பலமுறை தமிழக அமைச்சர் என்ற இத்தனை சிறப்புக்கள் இருந்தும் பேராசிரியர் என்ற இந்த பதத்திற்கு மட்டும், இவரைத் தவிர வேறு யாரையும் இன்றைக்கும் உருவகம் செய்துவிட முடியாது. அவர் படித்ததனால் மட்டுமே அதை பெற்றுவிடவில்லை, அவர் நடத்தையாலும் அதை உறுதி  செய்தார். அதிர்ந்து பேசாதவர், ஆனால் மாற்று கட்சிகாரர்களும் மதிக்க கூடிய தலைவர். பேராசிரியர் தம்பி வந்துவிட்டாரா என்று பேரறிஞரால் கூப்பிடப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர்.

k



திமுகவின் நாடித்துடிப்பு, கலைஞரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். கிட்டதட்ட 50 ஆண்டுகளாக கழகத்தின் பொதுச்செயலாளர் என்ற மிக முக்கிய பொறுப்பு. "என்ன வேண்டும் தருகிறேன், என்னிடம் வாருங்கள்" என்று தமிழக முதல்வரே அழைத்தாலும், அதை எல்லாம் துச்சமென மதித்து தான் கொண்ட கொள்கைக்கு வலுசேர்ந்தவர். "பேராசிரியர் ஒரே கட்சியில் இருக்கிறார் என்பதை ஏதோ அதிசயத்தை போன்று சிலர் கூறுகிறார்கள். அவர் உருவாக்கிய இயக்கத்தில் அவர் இருப்பதில் என்ன அதிசயம் இருந்துவிட போகிறது" என்று கலைஞர் அவரைப் பற்றி கூறியதே, அவருக்கும் இவர்தான் பேராசிரியர் என்பதை நிரூபிக்க போதுமானது. திமுக கழகம் உருவாகி 1957ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 15 உறுப்பினர்கள் மட்டுமே வெற்றிபெற்றார்கள். அதில் இவரும் ஒருவர். எழும்பூர் தொகுயில் வெற்றிபெற்று முதல்முறையாக கோட்டைக்குச் சென்றார். 62ம் ஆண்டு சட்டமேலவைக்கு சென்றார். 67ம் ஆண்டு திருச்செங்கோட்டில் இருந்து மக்களவைக்கு சென்றார். அடுத்து 71-ல் ஆரம்பித்து தொடர்ந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். 2006ம் ஆண்டுக்கு பிறகு அவர் உடல்நிலை காரணமாக அவர் தேர்தல்களில் பங்கெடுக்கவில்லை என்றாலும், கட்சியில் தனக்கான பணிகள் எதையும் அவர் குறைந்துக் கொள்ளவில்லை. 
 

l




இன்று உடல்நிலைக் குறைவு காரணமாக ஓய்வில் இருக்கிறார். இன்றைக்கு இந்தியாவில் நடக்கும் அரசியல் சூழ்நிலைகளை எல்லாம்  பார்க்கும் வாய்ப்பில்லை என்ற திருப்தியே இந்த பிறந்தநாளில் அவருக்கு கிடைத்த ஒரே மகிழ்ச்சி. வாழும் வரை கொள்கைக்காகவும், சுயமரியாதைக்காகவும் உழைத்தவருக்கு இன்றைக்கு நாடு முழுவதும் நடக்கும் சமூகநீதிக்கு எதிரான செயல்களை அவர் பார்க்காமல் இருப்பதே இயற்கை, அவருக்குக் கொடுத்த மிகப்பெரிய பிறந்தநாள் பரிசாக இருக்கும். ஏனென்றால், திமுக தலைவர் கலைஞர் செய்வதில் தவறு இருந்தாலே, அதையே எதிர்த்து குரல் கொடுக்கு ஆற்றல் கொண்டவராகவே கடைசி வரையிலும் அவர் இருந்தார். நல்லவேளை அவர் ஓய்வில் இருக்கிறார். இல்லையென்றால் அவர் ரோட்டிற்கு வந்து போராட வேண்டிய அவசியம் வந்திருக்கும். ஏனென்றால் அவர் அண்ணாவின் தம்பி, கலைஞரின் அண்ணன்!

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்