Skip to main content

“சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பாக இருப்பது திமுக அரசு” - அமைச்சர் ஐ. பெரியசாமி பேச்சு!

Published on 15/06/2025 | Edited on 15/06/2025

 

Minister I Periyasamy says DMK govt is the one that is safe for minority people

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட மதினா பேலஸில் சிறுபான்மையின மக்களான இஸ்லாமிய சமுதாய மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பெரிய பள்ளி வாசல் முத்தவல்லிகள் உதுமான்அலி, ஷேக் தாவுது ஆகியோர் தலைமை தாங்கினார்கள். திமுக மாவட்ட சிறுபான்மையின அணி துணை அமைப்பாளர் செல்லமரக் காயர் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சிறுபான்மையின மக்களிடமிருந்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மனுக் களை பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் அவர் பேசுகையில், “தமிழகத்தில் இஸ்லாமியச் சமுதாய மக்கள் பாதிக்கப்படும்போது முதல் ஆளாகக் குரல் கொடுப்பது திமுக. அன்றிலிருந்து இன்று வரை சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பது திமுக அரசு. இங்கு நூற்றுக்கணக்கான இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், கலந்து கொண்டு கோரிக்கை மனு கொடுத்துள்ளீர்கள். உங்கள் மனுக்கள் மீது ஒரு வாரக் காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இப்பகுதியைச் சேர்ந்த முத்தவல்லிகள் மற்றும் இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னோடிகள் விடுத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக  தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜா, ஆத்தூர் வட்டாட்சியர் முத்து முருகன், அகரம் பேரூராட்சி தலைவர் நந்த கோபால், மண்டல துணை வட்டாட்சியர் பிரவீணா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, முருகன் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் ஜெயமாலு மற்றும் திமுக பொறுப்பாளர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்