
மீன் உற்பத்தியை பெருக்க 60 நாட்கள் விசைப் படகுகள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை செய்யப்படுவது வழக்கம். இந்த காலக்கட்டத்தில் மீனவர்கள் தங்களின் விசைப் படகுகளை சீரமைத்து வைத்திருப்பார்கள். இந்த காலக்கட்டத்தில் மீனவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கி வருகிறது. அதே போல இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் (15.06.2025) முடிவடைகிறது. எனவே இந்த 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து நாளை (16.06.2025) கடலுக்குள் செல்ல மீனவர்கள் ஆர்வமாகவும் தயாராகவும் இருந்தனர்.
இத்தகைய சூழலில் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டனம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 377 விசைப் படகுகள் கடலுக்கு செல்ல மீனவர்கள் தயார் செய்து வைத்திருந்த நிலையில் இன்று பலமான காற்று வீசி வருகிறது. இதனால் நாளை மீனவர்கள் கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. 60 நாட்கள் தடைக்காலம் முடிந்து முதல் முறையாக கடலுக்குள் செல்ல தயாராகும் போது முதல்நாளே தடை ஏற்பட்டுள்ளது என்கின்றனர் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள்.