Skip to main content

குவியும் புகார்கள்! சிக்குவாரா இ.பி.எஸ்?

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

Complaints on edappadi palanisamiy

 

எடப்பாடி மீது தி.மு.க. அரசு தனது தாக்குதலை மிகத்தீவிரமாக தொடங்கியுள்ளது. எடப்பாடி முதல்வராக இருந்த காலத்தில் நடைபெற்ற டீலிங்குகள் எல்லாம் பூதக்கண்ணாடி வைத்து பார்க்கப்படுகின்றன. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கைப் போலவே இந்த டீலிங்குகளில் எடப்பாடி எப்படி சிக்குவார் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தனிப்படை அமைத்து தேடி வருகிறது. கொடநாடு வழக்கை இழுத்தடிக்க தனக்கு வேண்டிய போலீஸ் அதிகாரிகள் மூலம் எடப்பாடி முயற்சி செய்ததைப் போல, தி.மு.க. அரசின் இந்த தாக்குதலையும் எடப்பாடிக்கு நெருக்கமான முத்தரசி என்கிற லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி மூலம் முறியடிக்க எடப்பாடி காய் நகர்த்தி வருகிறார்.

 

லஞ்ச ஒழிப்புத் துறையில் தலைவராக இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற கந்தசாமி மிகவும் நேர்மையானவர். அமித்ஷாவையே கைது செய்தவர். ஆனால், அவர் ஒரு விபத்தில் சிக்கி தனது நினைவாற்றலில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தார். அதனால் அவரால் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகளை தெளிவாகத் தொடுக்க முடியவில்லை. அவருக்குப் பதிலாக தற்பொழுது பொருளாதார குற்றப்பிரிவு தலைவராக இருக்கும் அபின் தினேஷ் மோடக்கை கொண்டுவரலாம் என ஆலோசிக்கப்பட்டது. மோடக் தற்பொழுது அண்ணாமலை டீமை, ஆருத்ரா உட்பட இருபதாயிரம் கோடி போலி நிதி நிறுவன மோசடிகளை விசாரிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

 

சினிமா நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆருத்ரா மோசடியில் பதிமூன்று கோடி ரூபாய் வாங்கி இருக்கிறார். அந்தப் பணத்தை அண்ணாமலைக்கும் அமர்பிரசாத் ரெட்டிக்கும் பங்கு கொடுத்திருக்கிறார். தற்பொழுது ஆறு மாத டூரிஸ்ட் விசாவில் துபாய்க்கு சென்று தங்கியுள்ளார். காவல்துறை அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருப்பதால் ஆறு மாதத்திற்கு மேல் அவரால் அங்கு இருக்க முடியாது. அவரை கைது செய்யும் வேலைகளில் அபின் தினேஷ் மோடக் பிசியாக இருப்பதால் அவரை லஞ்ச ஒழிப்புத் துறை தலைவராக நியமிக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்தார்.

 

அதனால் அபய்குமார் சிங் என்பவர் கந்தசாமி ஓய்வுபெற்ற பிறகு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் ஆனார். இவர்தான் தற்பொழுது எடப்பாடிக்கு எதிராக ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறார். எடப்பாடி மீது அவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தபோது தவறான விவரங்களை அளித்ததாக ஒரு புதிய வழக்கொன்று தூசு தட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், செல்வப்பெருந்தகை தலைமையிலான சட்டமன்ற பொதுக்கணக்கு குழு சுகாதாரத் துறையில் ஒரு பெரிய ஊழல் எடப்பாடி ஆட்சிக்காலத்தில் நடந்ததாகக் கண்டுபிடித்துள்ளது. இந்தப் புகாரும் லஞ்ச ஒழிப்புத் துறையால் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வழக்கு போடும் நிலைக்கு வந்திருக்கிறது.

 

இதுபற்றி நம்மிடம் பேசிய சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவரும், பொதுக்கணக்கு குழு தலைவருமான செல்வப்பெருந்தகை, "அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு மெடிக்கல் சேல்ஸ் கார்ப்பரேஷன் சார்பாக பல கோடி ரூபாய்க்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே விஜயபாஸ்கருக்கு நெருக்கமான ஒரு கம்பெனி மூலமாக வாங்கப்பட்டுள்ளது. பத்து கம்பெனிகளின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தி எடப்பாடி ஆட்சியில் கொள்ளை நடந்திருக்கிறது. அதை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். அதன் விவரங்கள் விரைவில் வெளிவரும்'' என்றார்.

 

லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்களில் நாம் கேட்டபோது, "அனிதா இம்பெக்ஸ் என்கிற கம்பெனி விஜயபாஸ்கர் காலத்தில் சுகாதாரத் துறையில் கோலோச்சியது. எடப்பாடிக்கும் விஜயபாஸ்கருக்கும் நெருக்கமான இந்த கம்பெனி தான் தற்போது அமைந்துள்ள தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் பொங்கல் பரிசுப் பொருள்களை வழங்கும் டெண்டரைப் பெற்றது. மிகவும் சுகாதாரமில்லாத மோசமான பொருட்களை இந்த கம்பெனி வழங்கியது என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த கம்பெனிக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை நிலுவையில் வைக்கும்படி தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இந்த கம்பெனி பல்வேறு பெயர்களில் பல கோடி ரூபாய் டெண்டரில் அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத் துறையில் கான்ட்ராக்டுகளைப் பெற்றது. குறிப்பாக, கொரோனா காலத்தில் இந்த கம்பெனி மூலமாக கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக செல்வப்பெருந்தகை தலைமையிலான பொதுக்கணக்கு குழு கண்டுபிடித்துள்ளது” என்றார்கள்.

 

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மெடிக்கல் தலைவராக இருந்தவர் தற்பொழுது முதல்வரின் செயலாளராக இருக்கும் உமாநாத் ஐ.ஏ.எஸ். இவர் முதல்வருக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ். மூலம் “இந்த ஊழல் தொடர்பான பைல்களை மாற்றுங்கள்” என தற்பொழுது சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் கூற, அவர் மறுத்துவிட்டார். அதனால் உமாநாத் சுகாதாரத் துறை செயலாளராக தன்னை நியமிக்கும்படி முதல்வரிடம் வேண்டுகோள் வைத்திருப்பதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.