Skip to main content

"புத்தகத்தில் மறைத்து வைத்த மயில் இறகும்... பென்சில் சீவிய துகள்களும்.." - ஒரு 90ஸ் கிட்ஸின் நினைவலைகள்!

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

இன்றைய தேதியில் தொடக்கக் கல்வி பயிலும் ஒரு சிறுவனிடம், மயிலிறகை புத்தகத்தில் வைத்து தீனி போட்டால் குட்டி போடும் என்றோ! பென்சில் சீவிய துகள்களை சாதம் வடித்த நீரில் போட்டால் அது ரப்பராக மாறிவிடும் என்றோ கூறினால் அவன் நம்மை ஒரு வளர்ந்த முட்டாளாகவே பார்ப்பான், சத்தமாகச் சிரித்து  கேலி செய்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆனால் இவற்றையெல்லாம் உண்மை என்று நம்பிய சிறுவர்களாக நாம் இருந்தோம் என்பது இன்றும் வியப்பாகத்தான் இருக்கிறது.

 

j



#90s kids rumours இப்படி ஒரு ஹேஷ்டாக் சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கின் உச்சத்தில்  இருந்தது, லட்சக்கணக்கானோர் இந்த ஹேஷ்டேகை பகிர்ந்தும் இருந்தனர்.  இப்படி சமூக வலைத்தளங்களில் நாம் தவிர்க்கவே முடியாத ஒரு வார்த்தைதான் "90kids." இது அந்தக் காலகட்டதைச் சேர்ந்தவர்களுக்கு பெருமையாகவும் மற்றவர்களுக்கு எரிச்சலை தருவதாகவும் இருக்கலாம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் நீர்த்துப் போகாமல் இருக்கும் ஒரு வார்த்தை 90s Kids என்றால் அது மிகையாகாது.

யார் இந்த 90s Kids கள்:

1980களின் இறுதியில் பிறந்து 90களில் வளர்ந்தவர்களும், 90களின் ஆரம்பத்தில் பிறந்து அந்தக் காலகட்டத்தில் தங்களின் பள்ளிப் பருவத்தில் இருந்தவர்களும், 2000ங்களில் தங்கள் பதின் பருவத்தில் இருந்தவர்களுமே 90kids ஆகப் பாவிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் ஒரு விதத்தில் சிறப்பு வாய்ந்தவர்கள் ஏனென்றால் ஒரு நூற்றாண்டின் இறுதியை குழந்தைத் தன்மையோடு கடந்து வந்தவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் 1999 என்ற ஆண்டின் இறுதி‌ நாட்களை சுவாசித்தவர்கள். இரவும் விடியலும் சங்கமிக்கும் நேரம் போல அவர்கள் பழமையும் புதுமையும் மைய்யல் கொண்ட காலங்களை ரசித்தவர்கள், தொன்மை கலந்திருந்த அந்த நாட்களின் நிகழ்கால சாட்சியங்கள்தான் இந்த 90s Kids.

90s Kids அப்படி எந்த வகையில் பாக்கியம் செய்தவர்கள்:

1990களின் இறுதியில் தான்  தொழில்நுட்பம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வளர்ச்சி கண்டது அப்படி இருக்க எல்லா தொழில்நுட்பப் புதுமைகளின் முதல் பயனாளர்கள் 90s Kids தான். உதாரணத்திற்கு தொலைக்காட்சி, செல்போன், ஸ்மார்ட் போன், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பேஸ்புக் வாட்ஸ் அப் இப்படி இன்னும் பல.

90களின் மத்தியில் தான் உலகமயமாதல் தாராளமயமாதல் போன்ற‌ பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவில் பரவியது. அதன் விளைவாக தொழில் வளர்ச்சி என்ற பெயரில் கார்பரேட்கள்‌ நிறுவனங்கள் புகுந்து நமது கலாச்சாரம் முதற்கொண்டு அத்தனையையும் மாற்றியது. எனவே அவர்கள் வளர்ந்த‌ ஒவ்வொரு நாளிலும் புதுமைகள் இருந்து கொண்டே இருந்தது. அந்தப் புதுமைகளை அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் காலத்தில், திரும்பிப் பார்க்கும் போது அவர்களின் குழந்தைப் பருவத்தின் பழமைகள் கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து போயிருந்தன. அந்தப் பழமையில்தான் இயற்கை இருந்தது  ஆரோக்கியம் இருந்தது அன்பு இருந்தது.

 

jk



மாலை முழுதும் வியர்வை நனைக்க விளையாடினார்கள் இன்றோ ஆண்ட்ராய்டு போன்கள் நேரத்தை விழுங்குகிறது. விடுமுறை நாட்களை தாத்தா பாட்டிகளின் வீடுகளில் கழித்தார்கள் இன்றோ மால்களுக்கும் தியேட்டர்களுக்கும் படையெடுக்கிறார்கள். ஆசிரியர்களுக்கும் பெரியவர்களுக்கும் மரியாதை கொடுத்து வளர்ந்தார்கள் இன்றைய குழந்தைகளின் நிலை வேறு. கூகுள்களின் இடத்தை புத்தகங்கள் நிறைந்திருந்தன. முகநூலில் முகம் தெரியாத நண்பர்களாக இல்லாமல் விடுமுறையை ஊர் சுற்றிக் கழிக்க பெரும் நண்பர் பட்டாளம் இருந்தது. 

குடும்பத்துடனும் உறவினர்களுடனும் அதிக நேரங்களை செலவிடார்கள். நிலாச் சோறு, கூட்டாஞ்சோறு என மனித உறவுகளுக்கு அப்போது அதிக நேரம் இருந்தது. காதல் புனிதமாகவும், திருமணம் கட்டுப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்தது அதனால் உறவுச் சிக்கல்கள் அதிகம் இல்லை. கால ஓட்டத்தில் நடந்த சடுதி மாற்றத்தில், தொழில்நுட்பத்தால் முற்றொழிக்ககப்பட்டது அந்த பழமை மட்டும் இல்லை, இயற்கையும் ஆரோக்கியமும், அன்பும் சேர்த்துதான்.

அப்படி அவர்கள் இழந்தவை சில:

கட்டிடங்களும் தார் சாலைகளும் நிறைந்த பின்பு அவர்கள் மழைக்காலகால மண்வாசனையை இழந்திருந்தார்கள். விவசாய நிலங்கள் கட்டுமனைகளாக மாற்றப்பட்ட போது அவர்கள் இழந்தது விவசாயத்தை மட்டுமில்லை நாற்று நடும் பெண்களின் நாட்டுப்புற பாடலையும்தான். சினிமா தியேட்டகளும் மால்களும் வந்த பின்னர் தெருக்கூத்தையும், கரகாட்டத்தையும் ஒயிலாட்டத்தையும் இழந்திருந்தார்கள்.

இன்று பன்னாட்டு நிறுவனங்களின் இனிப்புகளையும் சிற்றுண்டிகளையும் கொரித்துக் கொண்டிக்கும் அவர்கள் பள்ளி இடைவேளையில் பள்ளிக்கு வெளியே வாங்கி சுவைத்த இலந்தை மிட்டாயையும் கடலை மிட்டாயையும் மற்றும் இழந்திருக்கவில்லை அதை விற்ற ஆத்தா, தாத்தாக்களின் அன்பையும்தான். அவர்களின் கண் முன்னேதான் அமிர்தம் வழிந்தோடிய ஆறுகள் சாக்கடைகளாக  மாற்றப்பட்டிருக்கலாம், நீச்சல் பழகிய குளங்கள் இருந்த இடத்தில் இன்று திருமண மண்டபமோ அரசாங்க கட்டிடமோ கூட இருக்கலாம்.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த விளையாடியவர்கள் இன்று ஆன்ட்ராய்டு போனில் பப்ஜி விளையாடுகின்றனர். பல்லாங்குழிகள் கேன்டிகிரஷாக மாறிப் போனது இரட்டைச்சடை ரிப்பன்கள் லூஸ் ஹேர் கலாச்சாரத்தை வந்தடைந்தது. பாவாடை தாவணிகள் லெக்கின்ஸாக உருமாற்றம் அடைந்தது. கணிணியை அதிசயமாகப் பார்த்தவர்கள் இன்று மடிக்கணினியை அலுத்துக் கொண்டு மூடுகின்றனர். எட்டாதக் கனியாக இருந்த இன்னும் எத்தனையோ தொழில்நுட்பங்களை இன்று ஆசை தீர உபயோகிக்கின்றனர். புதுமையையும் தொழில்நுட்பத்தையும் இன்று அனுபவித்தாலும், மனதில் பசுமரத்து ஆணிபோல நிலைத்திருக்கும் இழந்த அந்தப் பழமையின் நினைவுகளில் உழன்று தங்கள் கழிவிரக்கத்தை சமூக வலைத்தளங்களில் கொட்டுகின்றனர். அவை 90s kids நினைவுகளாக சேகரமாகின்றன..ஒருவிதத்தில் எதிர்வரும் தலைமுறையினரின் இணைய அருங்காட்சியகமாக  ஆவணப்படுத்தும் நிகழ்வுதான் இது

80s மற்றும் 2k kids:

என்பதுகளில் குழந்தையாக இருந்தவர்களும் தங்கள் பங்கிற்கு 80s kids என்று வைரலாக்க முயற்சித்தாலும் குடும்பத் தலைவர்களாக மாறிவிட்ட அவர்களால் 90s kidsக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவர்களுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஒரு சீரான இடைவெளி இருப்பதாலும் அவர்களால் சோபிக்க முடியவில்லை. தொழில்நுட்பத்தின் அத்தனை கூறுகளும் வாய்க்கப் பெற்று ஒரு Virtual உலகத்தில்  வசிக்கும் 2k kids, வளரும் முறையிலேயே பெரிய அளவில் மாற்றம் இருக்கிறது இதைக் கலாச்சார மாற்றம் என்று அறிஞர்கள் விளக்குகிறார்கள்.அதனாலேயே 90ஸ் கிட்ஸ் க்கும் 2K கிட்ஸ்க்கும் ஒரு ஆரோக்கியமான போட்டி ஒன்றும் நிலவுகிறது.  அது ஒரு விதத்தில் இளையோரை வழிநடத்தும் போக்காகக் கூட எடுத்துக் கொள்ளலாம். 
 

l



இப்படி 90ஸ் கிட்ஸ் என்பவர்களை கலாச்சார வளர்ச்சியில் ஒரு திருப்பு முனையாகவோ, காலக்ககோட்டில் சற்று தடித்த கோடாகவோ பார்க்கலாம். அவர்களின் உளவியல் என்பது கட்டுப்பாடு, இயற்கை, அன்பு, மற்றும் அறம் ஆகியவற்றை தங்கள் எல்லைகளாகக் கொண்டது. அது சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களில் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே 90ஸ் கிட்ஸ் அனைவரும் மற்ற அனைவரையும் விட சற்று அதிகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்களே!!  

எழுத்தாக்கம் - கார்த்திக் கண்ணன் 



 

Next Story

“இது என் முதல் போலீஸ் ஸ்டேஷன்; வீரப்பனுடன் நேரடி துப்பாக்கிச் சண்டை” - நினைவுகளைப் பகிர்ந்த டிஜிபி சைலேந்திரபாபு   

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

nn

 

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விரைவில் ஓய்வுபெற இருக்கும் நிலையில் அவர் முதன் முதலாக காவல் அதிகாரியாகப் பணியைத் தொடங்கிய ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு வருகை புரிந்து பார்வையிட்டார்.

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''கோபிசெட்டிபாளையம் காவல் நிலையம் தான் என்னுடைய முதல் காவல் நிலையம். 1989 ஆவது ஆண்டு இந்த காவல் நிலையத்தில்தான் நான் முதல் பணியை ஆரம்பித்தேன். கோபிசெட்டிபாளையம் என்பது இன்றைக்கு இருக்கக்கூடிய கோபிசெட்டிபாளையம் உட்கோட்டம், சத்தியமங்கலம் உட்கோட்டத்தை அடக்கிய பகுதி. அப்பொழுது வீரப்பன் இங்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த நேரம். சந்தன மரத்தை கடத்தி விற்பது; யானைகளை வேட்டையாடுவது; பல வன அதிகாரிகளை கொலை செய்தது இதுபோன்று நடந்தபோது தான் நான் இங்கு வந்திருந்தேன்.

 

வீரப்பனுடன் நான்கு முறை துப்பாக்கி சண்டை நடத்தி இருக்கிறேன். பலரை பிடித்திருக்கிறோம். அப்பொழுது மிகப்பெரிய சவாலாக இருந்த உட்கோட்டம் இப்பொழுது ரொம்ப அமைதியாக இருக்கிறது. காவல் நிலையத்தில் வழக்குகளை உடனுக்குடன் பதிவு செய்திருக்கிறார்கள். காவல் நிலையத்தில் எல்லா பதிவேடுகளையும் நான் பார்வையிட்டேன். சாதாரணமான வழக்குகள் கூட மொபைல் ஃபோன் திருட்டு போனால் கூட அதை பதிவு செய்து விசாரணை செய்து கண்டுபிடித்து இருக்கிறார்கள். இருசக்கர வாகனங்கள் காணாமல் போனால் கூட வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து சிலவற்றை பிடித்துள்ளார்கள். சிலவற்றை பிடிக்க முடியவில்லை.

 

காவல் நிலையத்துக்கு வருபவர்களை வரவேற்பதற்காக தமிழக முதல்வர் ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். காவல் நிலைய வரவேற்பு அதிகாரி. அவர்கள் யார் என்றால் காவல்துறையில் பணியாற்றும் போது உயிர் நீத்த காவலர்களுடைய குழந்தைகளுக்கு கருணை அடிப்படையில் இந்த பணியை கொடுத்துள்ளோம். அவர்கள் எல்லாருமே பட்டதாரிகள், இன்ஜினியரிங் படித்தவர்களாக இருக்கிறார்கள். எனவே காவல் நிலையத்திற்கு வருபவர்களை பரிவோடு பேசி உங்களுடைய நிலைமை என்ன; பிரச்சனை என்ன; உங்களுடைய புகார் என்ன; நீங்கள் யாரை சந்திக்க வேண்டும் எனக் கேட்டு, ஒருவேளை இன்ஸ்பெக்டர் இல்லாமல் இருந்தால் கூட உடனடியாக இன்ஸ்பெக்டரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக சொல்லி, உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து பிறகு உங்களுடைய பிரச்சனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்கும் அளவிற்கு வரவேற்பாளர்களை வைத்திருக்கிறோம். மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.

 

 

Next Story

''நடந்துதான் பள்ளிக்கு வருவேன்; அதற்கான காரணத்தை இப்போது சொல்ல முடியாது'' - நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட மு.க. ஸ்டாலின்

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மேல்நிலைப் பள்ளியில் இன்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற முறையில் கலந்து கொண்டார். நிகழ்வின் மேடையில் பேசிய தமிழக முதல்வர், ''மாணவப் பருவம் என்பது யாருக்கும் கிடைக்காத காலம். இந்த மாதிரியான பள்ளிக் காலத்தில்தான் நாம் மகிழ்ச்சியோடு இருந்தோம். அத்தகைய பள்ளிக்காலத்தில் எப்படி எல்லாம் துள்ளித் திரிந்தோம் என்பதை எல்லாம் நான் நினைத்து நினைத்துப் பார்த்தேன்.

 

இந்தப் பள்ளியில் நான் படித்த பொழுது நமது தமிழாசிரியர் ஜெயராமன் சொன்னதுபோல் என்னுடைய அப்பா அன்றைக்குப் போக்குவரத்துத் துறையின் அமைச்சராக இருந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகுதான் முதலமைச்சராக வருகிறார். போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது நான் எந்த பந்தாவும் இல்லாமல் ஒரு அமைச்சருடைய மகனாக நடந்து கொள்ளவில்லை. நான் மட்டுமல்ல நான் அப்படி நடந்து கொள்வதை என்னுடைய தலைவர், என்னுடைய தந்தை கலைஞரும் விரும்பமாட்டார். இதெல்லாம் என்னுடன் படித்தவர்களுக்குத் தெரியும். என்னுடைய ஆசிரியர்களுக்கு இது தெரிந்திருக்கிறது என்றால் என் கூட படித்தவர்களுக்கும் இது தெரியும்.

 

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நான் கோபாலபுரத்தில் இருந்தபோது அமைச்சரின் மகனாக இருந்தும் பள்ளிக்கூடத்திற்கு பேருந்தில்தான் வருவேன். சில நேரங்களில் சைக்கிளில் வந்திருக்கிறேன். வீட்டிலிருந்து ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ் வரை நடந்து வந்து பல்லவன் போக்குவரத்து கழகத்தின் '29 சி' என்ற பேருந்தைப் பிடித்து அந்த பஸ்ஸில் ஏறி ஸ்டெர்லிங் ரோட்டில் வந்து இறங்கி, அங்கிருந்து மூன்று, நான்கு கிலோமீட்டர் நடந்துதான் பள்ளிக்கு வருவேன். நடந்து வருவதற்குப் பல காரணங்கள் உண்டு அதெல்லாம் இப்பொழுது சொல்ல முடியாது. அதெல்லாம் பழைய நினைவுகள். அப்படித்தான் இந்த பள்ளிக்கூடத்துக்கு நான் வந்து சென்றேன். அதுதான் என்னுடைய உண்மையான இயல்பு. அதே மாதிரி தான் இப்பொழுதும் இங்கே நான் முதல்வராக வரவில்லை என்று சொன்னேன்.

 

உங்கள் நண்பராகத்தான் வந்திருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் எனக்கு இந்த செக்யூரிட்டி போன்ற பாதுக்காப்பு முறைகள் எல்லாம் இல்லை என்றால், அவர்கள் ஒத்துக் கொண்டால் நிச்சயமாக நான் பஸ் அல்லது சைக்கிளில்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கணும். ஆனால் செக்யூரிட்டி விட மாட்டாங்க. அது உங்களுக்குத் தெரியும். மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் பெருமைப்படுகிறேன்'' என்றார்.