
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியன்று(அக்டோபர் 31) வெளியான படம் அமரன். இந்தப் படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவரது மனைவியாக சாய் பல்லவி நடித்திருந்தார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் கொண்டாட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் தவிர்த்து படத்தின் வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு கமல் கேடயம் வழங்கி கௌரவித்தார். பின்பு சிவகார்த்தியேன் மேடையில் பேசும் போது படம் தொடர்பாக நிறைய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது கமல் குறித்து பேசிய அவர், “எனக்கு கரெக்டா சம்பளம் வந்திருச்சு. அப்படி வரதே இங்கு அரிது. என் பட ரிலீஸின் போது பாதி நைட் அன்பு அண்ணன் ஆபிஸ்ல தான் இருப்பேன். சிலர் சம்பளம் கொடுக்குறது மட்டும் இல்லாம பாதிய வாங்கிட்டு வேற போய்டுறாங்க. அதுக்கு இரண்டு மூணு குரூப் வேற வைச்சிருக்காங்க. உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்ல. இந்தப் பட ரிலீஸுக்கு முன்பு ஆறு மாசம் இருக்கும் போதே சம்பளம் எல்லாம் கரெக்டா கொடுத்து மரியாதையும் கொடுத்தாங்க. அப்படி ஒரு கம்பெனி இங்க இருக்குறது ரொம்ப அரிது என நினைக்கிறேன்” என்றார்.