Skip to main content

கேதர் ஜாதவிடம் என்ன உத்வேகத்தைப் பார்த்தீர்கள்... தோனியை சரமாரியாக விமர்சித்த ஸ்ரீகாந்த்!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

Srikkanth

 

கேதர் ஜாதவிடம் என்ன உத்வேகத்தைப் பார்த்தீர்கள் எனத் தோனியை நோக்கி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார் .

 

13-ஆவது ஐ.பி.எல் தொடரின், 37-ஆவது லீக் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில், சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தோல்விக்குப் பின் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனியிடம், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்காதது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தோனி, "இளம் வீரர்களிடம் போதிய அளவில் உத்வேகம் இல்லை என்பதால் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இனி வரவிருக்கும் போட்டிகளில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்" என்றார். தோனியின் இந்தக் கருத்தானது கடும் விமர்சனத்தைச் சந்தித்து வருகிறது.

 

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த், தோனியின் கருத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர், "இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை என்கிறீர்கள். கேதர் ஜாதவிடம் என்ன உத்வேகத்தைப் பார்த்தீர்கள். பியூஸ் சாவ்லா என்ன உத்வேகத்தைக் காட்டினார். இனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்கிறீர்கள். ஜெகதீசன் ஏற்கனவே தனது உத்வேகத்தைக் காட்டிவிட்டார். தோனி சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரத்தில் தோனியின் இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்" எனக் கூறினார்.