Skip to main content

ட்ரம்ப்- ஜின்பிங் குறித்த புத்தகம்... தடைவிதிக்கக் கோரும் அமெரிக்க அரசு...

Published on 18/06/2020 | Edited on 18/06/2020

 

the room where it happened book controversy


அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சில தனிப்பட்ட அரசியல் பேச்சுவார்த்தைகளைப் பற்றி அமெரிக்காவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் எழுதிய புத்தகத்திற்குத் தடை விதிக்கவேண்டும் என அமெரிக்க அரசு நீதிமன்றம் சென்றுள்ளது. 

 

முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தில், 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தன்னை வெற்றிபெற வைக்கச் சீனா உதவ வேண்டும் என ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் ஜின்பிங்கிடம் கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டிற்குப் பின், அமெரிக்காவின் விவசாயப் பொருட்களைச் சீனா அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டும் எனவும், இதன் மூலம் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற முடியும் எனவும் ஜின்பிங்கிடம் ட்ரம்ப் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல உய்குர் முஸ்லிம்களைப் பெருமளவில் காவலில் வைப்பதற்காகச் சீனா வதை முகாம்களைக் கட்டுவதாகக் கடந்த ஆண்டு ட்ரம்ப்பிடம் ஜின்பிங் கூறியபோது, ​​ட்ரம்ப் அதற்கு ஆதரவான கருத்தைக் கூறினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் அதிகாரபூர்வமாக அடுத்த வாரம் வெளியாக உள்ள சூழலில், புத்தகத்தின் ஒரு பகுதி வால்ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்க அரசியலில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. போல்டனின் இந்தக் குற்றசாட்டுகளைக் கடுமையாக மறுத்துள்ள அதிபர் ட்ரம்ப், "அவர் ஒரு பொய்யர்" எனவும் விமர்சித்துள்ளார். மேலும் இந்தப் புத்தகத்திற்குத் தடை கோரி அமெரிக்க அரசு நீதிமன்றத்தை நாடி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அமெரிக்காவிற்கு கிடைத்த வெற்றி” - நீதிமன்றத் தீர்ப்பால் மகிழ்ச்சியில் டிரம்ப்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Trump happy with court ruling and he posted "Victory for America" ​​

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ஜனநாயகக் கட்சி சார்பாக ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையே, கடந்த 2021 ஆம் ஆண்டு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடம் ஆட்சி பொறுப்பை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வெற்றிச் சான்றிதழ் அளிப்பு நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல், டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்னால் நின்று கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கிய இந்த கலவரத்தில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், அந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டிரம்ப் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

அதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறிய பின்பு, அமெரிக்கா அரசின் ரகசிய ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில், கொலராடோ மாகாணத்தின் நீதிமன்றத்திலும் நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கொலராடோ நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அளித்தது. அதில், இந்த ஆண்டு (2024) நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்புக்கு தகுதி இல்லை என்ற பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. மேலும், குடியரசு கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலின் வாக்குச் சீட்டில் டிரம்ப்பின் பெயர் இடம் பெறக்கூடாது என்றும், அவ்வாறு இடம்பெற்றால் அவருக்கு அளிக்கும் வாக்கு செல்லாது என்றும் தெரிவித்தது. 

இதனையடுத்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து டொனால்ட் டிரம்ப், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று (05-03-24) அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடத் தடையில்லை எனக் கூறி கொலராடோ நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர். அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து டொனால்ட் டிரம்ப், சமூக வலைத்தளத்தில், ‘அமெரிக்காவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ஜி 20 உச்சி மாநாடு; சீன அதிபர் புறக்கணிப்பு?

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

G20 Summit Chinese president boycott

 

ஜி 20 அமைப்பின் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி 20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஜி - 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். அதன்படி செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 4 நாள் பயணமாக இந்தியாவிற்கு வர உள்ளார். செப்டம்பர் 10 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின், நாடு திரும்ப உள்ளார்.

 

இந்நிலையில் டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக சீன பிரதமர் லி கியாங்க் பங்கேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக உக்ரைனில் மனித உரிமை மீறல் தொடர்பாக புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதன் காரணமாக ஜி 20 அமைப்பின் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.