
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மல்லாக்கோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கல்குவாரியில் கடந்த மே மாதம் 400 அடி பள்ளத்தில் விதிகளை மீறி பாறைகளை வெடி வைத்துத் தகர்த்தனர். அப்போது ஏற்பட்ட அதிர்வில் பாறை சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் புலம்பெயர் தொழிலாளி உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக குவாரியின் உரிமையாளர் மற்றும் அவரது தம்பி மற்றும் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 3 பேரை மட்டுமே போலீசார் கைது செய்தனர். அதே சமயம் கல்குவாரி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் கைது செய்யப்படாமல் உள்ளார். மேலும் இந்த கல்குவாரி உரியப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றப்படாமல் செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித் இந்த கல்குவாரியின் உரிமையை ரத்து செய்து உத்தரவிட்டுருந்தார்.
அதோடு இந்த கல்குவாரி 8 மாதங்களாக எவ்வித அனுமதியும் இல்லாமல் செயல்பட்டது புள்ளியியல் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து உரிமம் காலாவதியான பிறகும் 8 மாதமாகச் செயல்பட்டு வந்தது தொடர்பாகக் கனிம வளத்துறை அதிகாரிகள் அறிக்கை தயார் செய்தனர். இந்த அறிக்கையின் படி தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயூஷ் வெங்கட் வாட்ஸ், கல்குவாரிக்கு 91 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். அதாவது சட்ட விரோதமாகச் செயல்பட்டு கற்களை வெட்டி எடுத்ததற்காக 91 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.