Skip to main content

மோடியை விட்டு கூட்டணிக் கட்சிகள் தெறித்து ஓடுவது ஏன்!

Published on 10/03/2018 | Edited on 10/03/2018


மோடியும் பாஜகவும் பேசுகிற தேசபக்தி எந்த அளவுக்கு மக்களை ஏமாற்றக்கூடியது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. தேசிய வெறியையும், இந்து மத வெறியையும் உசுப்பிவிட்டு, அதில் ஏற்படும் கொலைவெறி உஷ்ணத்தில் தேர்தல் குளிர்காய்வதே பாஜகவின் வாடிக்கை.
 

2014 தேர்தலுக்கு மோடியை பில்டப் செய்வதற்கே அம்பானிகளும் அதானிகளும் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பான்ஸர் செய்தார்கள். உலகின் மிக முக்கியமான கட்டுமானங்களையெல்லாம் மோடியின் குஜராத்தில் இருப்பதுபோல போட்டோஷாப் வேலை செய்து பிரச்சாரம் செய்தார்கள்.
 

மோடி வந்தால் பாகிஸ்தான் வாலை சுருட்டிக்கொண்டு ஒடுங்கிவிடும் என்றார்கள். சீனாவோ மோடியின் 56 இன்ச் மார்பைப் பார்த்து அரண்டு பதுங்கிவிடும் என்றார்கள்.
 

தேனாறும் பாலாறும் இந்தியாவின் தெருக்களில் குழாய்கள் மூலம் பாயும் என்றார்கள். கங்கையில் மிதக்கும் அழுகிய பிணங்கள் இனி மிதக்காது. கங்கை நீர் பளிங்கு நீர்போல பளபளக்கும் என்றார்கள்.

 

TDP-BJP 350


 

இந்தியா உலகின் வல்லரசாகிவிடும். இந்தியாவில் உள்ள கறுப்புப்பண முதலைகள் அனைவரும் சிறையில் தள்ளப்படுவார்கள். பொருளாதாரத்தில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளிவிடும் என்றெல்லாம் பில்டப் செய்தார்கள்.
 

ஆனால், இதெல்லாம் நான்காண்டுகளில் எந்த அளவுக்கு உண்மையாகியது? எதுவுமே இல்லை. எல்லாமே வாய்ச்சவடால்தான். பாகிஸ்தானையும் சீனாவையும் மிரட்டுவார் என்று சொல்லப்பட்ட மோடி, பத்திரிகையாளர்களையே சந்திக்க பயப்படுவது பிறகுதான் தெரிந்தது.
 

பாகிஸ்தானும், சீனாவும் காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும் அளவுக்கதிமாக மிரட்டத் தொடங்கிவிட்டன. இவரும் பயந்து நடுங்கியதை இந்தியா பார்த்தது.
 

எதைச் செய்தாலும் தான்தோன்றித்தனமாக செய்துவிட்டு மக்களை வாட்டி வதைத்ததுதான் மோடியின் அதிகபட்ச சாதனை. சொந்த மனைவிக்கு மனைவி என்ற அந்தஸ்த்தையும் கொடுக்கவில்லை. சாதாரண குடிமகள் என்ற அளவுக்கு அவருக்குரிய சுதந்திரத்தையும் கொடுக்கவில்லை.
 

மோடியின் பொய்களும் உறுதியற்ற தன்மையும் அவரை அவருடைய கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தே பிரிக்கத் தொடங்கியிருக்கிறது.
 

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரான ஜீலானியிடம் 1986 ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை கொடுக்கமாட்டேன் என்று மோடி ஆவேசமாக கூறினார். ஆனால், பாஸ்போர்ட்டை கொடுத்ததுடன், ஜீலானியின் உறவினருக்கு அரசு வேலையும் கொடுத்தார்.
 

பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி வைத்து அந்த கட்சியின் தலைமையிலான அரசில் பங்கும் வகிக்கிறார் மோடி.
 

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை பாகிஸ்தான் தூதரகம் அழைத்ததால், இந்தியா பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை ரத்து செய்தார். ஆனால், பிறகு தானாகவே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார்.
 

பிரதமராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ்செரீபை மோடி அழைத்தார். பிறகு, முன்னறிவிப்பே இல்லாமல் பாகிஸ்தான் சென்று நவாஸ் செரீபை சந்தித்தார். நவாஸின் தாய் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.
 

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட மஸரத் ஆலமை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டார். ஆலம் உத்தரவின் பேரில் நடைபெற்ற போராட்டத்தில் 200 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.
 

இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் விதவை மனைவியரின் மறுவாழ்வுக்காக ஆஸியா ஆன்ட்ராபி என்பவர் தொடங்கிய அமைப்புக்கு அனுமதி கொடுத்தார். அதுமட்டுமின்றி பாகிஸ்தான் தேசியக் கொடியை ஏற்றி, பாகிஸ்தான் தேசியகீதத்தை பாடவும் அவருக்கு அனுமதி கொடுத்தார் மோடி.
 

2016 ஜனவரி 2 ஆம் தேதி இந்திய எல்லைக்குள் உள்ள பதான்கோட் விமானப்படைத் தளத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் தளத்தையே அழித்தனர். இதில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டதாக சொன்னாலும், இந்திய தரப்பில் 6 பேர் மட்டுமே உயிரிழந்ததாக கூறியது விமர்சனத்துக்கு உள்ளாகியது. மோடியின் பொறுப்பில் உள்ள இந்தச் சம்பவம் பற்றிய விசாரணை விவகாரம் இதுவரை முடிவுக்கு வரவில்லை.
 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைக் காட்டிலும் மோடி தலைமையிலான 4 ஆண்டுகளில் நடைபெற்ற தாக்குதல்கள் அதிகம் ஆகும்.
 

காங்கிரஸின் 10 ஆண்டுகால ஆட்சியில் உயிரிழந்த இந்திய வீரர்களைக் காட்டிலும் மோடி ஆட்சியின் முதல் மூன்றாண்டுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகம்.
 

ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க மோடி தன்னைப்போல ஒரு தேசியவாதி யாரும் இல்லை என்கிற ரேஞ்சுக்கு வாய்ச்சவடால் விட தொடங்கியிருக்கிறார்.
 

எனினும் அவருடைய வெட்டி ஜம்பங்கள் எதுவும் எடுபடாமல் போய்க்கொண்டிருக்கின்றன. குஜராத்தில் மோடி திணறிய திணறலில் தொடங்கியது அவருடைய வீழ்ச்சி. தட்டுத்தடுமாறி வெற்றியைத் தக்க வைத்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் அந்த வெற்றி கைகொடுக்காது என்பது அரசியல்வாதிகளுக்கு தெரிந்துவிட்டது.
 

shiv-sena


குஜராத் தேர்தலுக்கு முன்னரே, பாஜகவின் இயல்பான கூட்டாளியாக கருதப்பட்ட சிவசேனா, பாஜகவின் உறவை முறித்துக்கொண்டது. மோடியின் செயல்பாடுகள் அந்தக் கட்சி கடுமையாக விமர்சித்திருக்கிறது. அதுமட்டுமின்றி காங்கிரஸையும் ராகுல் தலைமையையும் அது ஆதரித்திருக்கிறது.
 

சிவசேனாவைத் தொடர்ந்து, ஆந்திராவில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தெலுங்குதேசம் கட்சியும் தனது உறவை முறித்துக் கொண்டது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்த்து கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற மோடி மறுத்துவிட்டதைத் தொடர்ந்தே இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
 

அவரைத் தொடர்ந்து தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் மாநில உரிமைகள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். தெலுங்குதேசம் எம்பி ஒருவர் தென்னிந்தியா தனிநாடாக மாறும் நிலைக்கு தள்ளப்படுவதாக எச்சரித்திருக்கிறார்.
 

சந்திரபாபு நாயுடுவைத் தொடர்ந்து, பிகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிற நிதிஷ்குமாரும் சமயம்பார்த்து சிறப்புநிதிக் கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.
 

கூட்டணிக் கட்சிகளின் இந்த முடிவுக்கு காரணம் என்னவென்றால், குஜராத்தில் திக்குமுக்காடிய பாஜக ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், கர்நாடாக மாநிலங்களில் தோல்வியின் விளிம்புக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதை இந்தக் கட்சிகள் உணர்ந்திருக்கின்றன.
 

தவிர, கடந்த தேர்தலில் கிடைத்தது போல பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் துணையோடு அறுதிப்பெரும்பான்மை பெற்ற பாஜகவும் மோடியும் தன்னிச்சையாக செயல்படுவதாக இந்தக் கட்சிகள் கருதுகின்றன.
 

எது எப்படியோ சமீபத்தில் வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்களும், 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறப்போகும் மக்களவைத் தேர்தலும் பாஜகவுக்கும் மோடிக்கும் சரியான பாடம் புகட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.