Skip to main content

''வாய்தாவிற்கு மேல் வாய்தா...'' - பாலியல் வழக்கில் முன்னாள் டிஜிபிக்கு எச்சரிக்கை

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Warning to former DGP in case

 

தமிழக, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

 

இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி..ஜி.பி. ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் சிபிசிஐடி போலீசார். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு மேலும், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டார்.

 

தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்த ராஜேஷ் தாஸ் வாதத்தை தொடங்காமல் தொடர்ந்து வாய்தா கேட்டு வந்த நிலையில், தொடர்ந்து வாய்தா கேட்டால் விசாரணையின்றி தீர்ப்பு வழங்கப் போவதாக நீதிபதி அறிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், நவம்பர் 21 ஆம் தேதி ஆஜராகி வாதத்தை தொடங்க ராஜேஷ் தாஸ் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்