Skip to main content

பாலியல் விவகார ஆர்ப்பாட்டம்!- வலிமை காட்டிய பா.ஜ.க.!

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

virudhunagar district bjp leader women incident police investigation

 

விருதுநகரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பட்டியலினப் பெண்ணிற்கு நீதி வேண்டி பா.ஜ.க. மகளிரணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் மைக் பிடித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை “இந்த ஆர்ப்பாட்டம் அரசியல் செய்வதற்காக அல்ல..” எனக் குறிப்பிட்டார். ஆனாலும்,  துபாய் மர்மம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயண நோக்கம்.. என்றெல்லாம் பேசிவிட்டு, “தேர்தல் நேரத்தில் மாற்று அரசியலை விரும்பும் மக்கள் பா.ஜ.க.வுக்கு அன்பு தர வேண்டும்.” என்றே முடித்தார்.

 

டெல்லியில் 10 வருடங்களுக்கு முன், ஒரே நேரத்தில் 6 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயா விவகாரத்தோடு, விருதுநகரில் கடந்த 8 மாதங்களாக 8 பேரால் ஆபாச வீடியோ மிரட்டலோடு இளம்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமையை முடிச்சுப் போட்டு, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளி தி.மு.க.தான்..” எனத் திமுக மீதான தாக்குதலையே பெரிதாக அண்ணாமலை முன்னிறுத்த, ஆர்ப்பாட்ட மேடையில் அண்ணாமலைக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய பா.ஜ.க. நிர்வாகிகள் “எங்கள் புரட்சித் தலைவர்..” என அவரைப் புகழ்ந்து தள்ளினர். 

 

பா.ஜ.க. நிர்வாகிகளில் ஒருவர் அறிந்தோ, அறியாமலோ அந்தக் குற்றச் சம்பவத்தைக் குறிப்பிட்டபோது,   “பாலியல் வன்புரட்சி..” என்ற  புது வார்த்தையைப் பிரயோகித்தார். “ஸ்டாலின் நல்லவர் போல நடிக்கிறார்..” எனத் திட்டித் தீர்க்க அந்த ஆர்ப்பாட்ட மேடை பா.ஜ.க.வுக்கு தாராளமாகப் பயன்பட்டது. 

virudhunagar district bjp leader women incident police investigation

அந்தப் பெண்ணிடம் எந்தெந்த இடங்களில் எப்படியெல்லாம் அந்த 8 பேரும் நடந்துகொண்டார்கள் என்பதை விலாவாரியாகப் பேசிய ஒரு நிர்வாகி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தி.மு.க. இளைஞரணியைச் சேர்ந்த ஜூனத் அகமது தற்காலிகமாக அக்கட்சி நீக்கியதைக் குறிப்பிட்டு என்று ஆளும்கட்சியான தி.மு.க., துணைபோவதாகக் கடுமையாக விமர்சித்தார்.  

 

ஆர்ப்பாட்ட மேடையில் ஆளாளுக்கு ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த விருதுநகர் நகர பா.ஜ.க. சிறுபான்மை அணித் தலைவர் ஜாபர்சாதிக் “நானும் அந்த ஏரியாதான். எனக்கு அந்தப் பெண்ணையும் தெரியும். அந்தக் குடும்பத்தையும் நல்லா தெரியும். நான் சொல்வதெல்லாம் சத்தியம்.. சத்தியம்.. சத்தியம்..” என்று நம்மால் குறிப்பிட முடியாத ஒரு வில்லங்கமான வார்த்தையை மூன்று தடவை சொல்லிவிட்டு “அரெஸ்ட்டானதுல ஒருத்தன் எனக்குச் சொந்தக்காரன். அதுக்காக,  அவன் கஞ்சா குடிக்கி இல்லைன்னா சொல்ல முடியும்? ஆம்பளையோ, பொம்பளையோ எல்லாரும் உயிர்தான். உண்மையிலேயே என்ன நடந்துச்சுன்னு தெரியாம, இந்தக் கேவலமான விஷயத்தை பப்ளிக்கா பேசிட்டு இருக்காங்க.” என்று வெள்ளந்தியாகக் கவலைப்பட்டார். 

 

‘நீதி வேண்டும்! பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கமுடியாத விடியா அரசைக் கண்டிக்கிறோம்!’ என்ற பதாகையைக் கையில் வைத்திருந்த அருப்புக்கோட்டை விஷ்ணுபிரியா “அந்தப் பெண் இந்து என்பதால் யாரும் குரல்கொடுக்க முன்வரவில்லை. பா.ஜ.க. குரல் கொடுக்கிறது.” என்று இதிலும் மத அரசியலை முன்வைத்தார். அழைத்துவரப்பட்ட மூதாட்டிகளில் ஒருவரான செல்லத்தாய் “கையில கொடியைக் கொடுத்தாங்க, வச்சிருக்கேன். யாரும் எதுவும் கவனிக்கல தம்பி.. பெயரைக் கேட்கிறீங்க, எனக்கு பிரச்சனை எதுவும் வராதுல்ல..” என்று வறட்சியாகச் சிரித்தார்.

 

‘தி.மு.க.விடம் இருந்து விழித்திரு; விலகி இரு!’ என்ற அரசியல் கோஷத்தை பா.ஜ.க. முன்வைப்பதற்கு, பாலியல் வன்கொடுமை விவகாரம் பெரிதும் பயன்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.