விழுப்புரம் அருகே சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை அபி என்கிற அபிராமி. இவரது பூர்வீகம் விருத்தாசலம். சிந்தாமணி பகுதியில் கடந்த 10 வருடங்களாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று செஞ்சி சாலையில் உள்ள அயினாம்பாளையம் என்ற பகுதியில் தலையில் தாக்கப்பட்டு அபிராமி இறந்து கிடந்துள்ளார். அந்த வழியே சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளனர்.

மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அபிராமியின் உடலை கைப்பற்றிய போலீசார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விழுப்புரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது திருநங்கைகளுக்குள் பிரச்சனை ஏதும் வந்து கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் கொலைக்கான காரணம் குறித்து கண்டறிப்படும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.