Skip to main content

பள்ளி வளாகத்தில் ஆசிரியரை அரிவாளால் தாக்கிய அண்ணன்; தடுக்க சென்ற மாணவர்கள் காயம்

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

villupuram district school teacher property incident 

 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள். இவர்கள் அனைவருக்கும் ஆறு ஏக்கர் நிலம் உள்ளது. இதை பங்கு பிரிப்பது சம்பந்தமாக ஆசிரியர் நடராஜனின் மூத்த சகோதரர் ஸ்டாலின் தனது தம்பி நடராஜனை அரிவாளால் தாக்கி உள்ளார். ஆசிரியர் நடராஜன் கோலியனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் தங்கி உள்ளார். சம்பவத்தன்று நடராஜன் மதிய உணவை சாப்பிட்டு விட்டு வருவதற்காக  வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் பள்ளியை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த அவரது மூத்த சகோதரர் ஸ்டாலின் தனது தம்பி நடராஜனை வழிமறித்து சொத்து பிரச்சனை சம்பந்தமாக கேட்டுள்ளார்.

 

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த ஸ்டாலின் தனது தம்பி நடராஜன் முதுகில் வெட்டியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத நடராஜன் அலறி அடித்துக் கொண்டு பள்ளி வளாகத்துக்குள் ஓடி உள்ளார். அவரை துரத்திச் சென்ற ஸ்டாலின் அவரது கையில் மீண்டும் வெட்டியுள்ளார். இதைக் கண்டு பதறிப் போன பள்ளி மாணவர்கள் தங்கள் ஆசிரியரை ஒருவர் அரிவாளால் வெட்டுவதை கண்டு திடுக்கிட்டதோடு அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதில் மாணவர்கள் மனோஜ், ஆகாஷ், முருகன் ஆகியோருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

 

அங்கு இருந்த மாணவர்கள் ஸ்டாலின் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி உள்ளனர்.  ஆசிரியர்கள் மூலம் உடனடியாக வளவனூர் காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர்.  இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து நடராஜனை அரிவாளால்  வெட்டிய ஸ்டாலினை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், "தனது தம்பி ஆசிரியர் நடராஜன் தங்களது பூர்வீக சொத்தை எனது தந்தை இறந்த பிறகு பங்கு பிரிக்கும் போது எனக்குரிய பங்கை தரக்கூடாது என கூறியுள்ளார். இவர் ஆசிரியராக கை நிறைய சம்பாதிக்கிறார். விவசாயம் செய்யும் எனக்கு போதிய வருமானம் இல்லை. எனவே எனக்குரிய பங்கை தர மறுப்பது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதற்கு நியாயம் கேட்பதற்காக ஊரில் இருந்து பள்ளிக்கு தேடி வந்தேன். இங்கு  வந்து கேட்ட போதும் அவர் எனக்கு எதிராக பேசினார். அதனால் கோபத்தில் தயாராக வைத்திருந்த அரிவாளால் வெட்டினேன்" என்று கூறியுள்ளார்.

 

இதையடுத்து ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்த வளவனூர் போலீசார் அவரை நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். காயமடைந்த ஆசிரிய நடராஜனுக்கும் மாணவர்களுக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.