Skip to main content

நண்டு வளர்த்தால் நான்கு மடங்கு லாபம்... 4 கோடியை மோசடி செய்த கும்பல்!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம், நண்டு வளர்ப்பு தொழிலில் ஈடுப்பட்டால் நான்கு மடங்கு லாபம் கிடைக்கும் என ஒரு கும்பல் ஆசைவார்த்தை கூறியுள்ளது. இதனை நம்பி குடியாத்தம், கே.வி.குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள 30- க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 450- க்கும் மேற்பட்ட படித்தவர்கள் பலர் முதலீடு செய்து ஏமாந்து நின்றுள்ளனர்.
 

இதுக்குறித்து வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ப்ரவேஷ்குமாரிடம் புகார் அளிக்க வந்தனர் ஏமாந்தவர்களில் ஒரு பகுதியினர். அதில் சந்திரா என்பவர் அளித்துள்ள புகார் மனுவில், நான் தலைமுடி வாங்கி விற்கும் ஏஜெண்ட். எனக்கு திருவண்ணாமலையைச் சேர்ந்த ரேணுகாதேவி, ஜெய் என்பவர்கள் அறிமுகமானார்கள். இவர்களை எனது முகநூல் நண்பர் ஆதித்யா என்பவர் அறிமுகம் செய்துவைத்தார்.

vellore gudiyatham 4 crores police commissioner

ரேணுகாதேவியும், ஜெய்யும் சேர்ந்து நண்டு வளர்ப்பு தொழிலில் முதலீடு செய்தால் நான்கு மடங்கு லாபம் என்றனர். இதற்கான முதலீட்டு நிறுவனம் சென்னை வடபழனியில் லஷ்மணன் என்பவர் நடத்தி வருகிறார் எனச்சொல்லி அறிமுகப்படுத்தினார்கள். அவரை போய் சந்தித்தபோது, நண்டு வளர்க்கும் இடத்துக்கு அழைத்து சென்று இந்த தொழிலை நாங்கள் தான் செய்கிறோம் எனச்சொல்லி காட்டினார். முதலீடு செய்யும் பணத்தை மும்மடங்கு லாபத்தோடு வார வாரம் 30 வாரத்துக்கு வழங்கப்படும் என்றார்.


நான் முதலில் முதலீடு செய்தேன், அதன்பின் எனக்கு தெரிந்தவர்கள் என 108 பேரை சேர்த்து 1 கோடியே 11 லட்சம் ரூபாய் அவர்கள் சொன்ன வங்கி கணக்கிலும், பணமாக நேரில் 1 கோடியே 20 லட்ச ரூபாய் என மொத்தம் 2 கோடியே 31 லட்ச ரூபாய் வழங்கினேன். அதேபோல் நான் அறிமுகப்படுத்திய ராணுவ வீரர்கள், ஆசிரியர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் என பலரும் முதலீடு செய்துள்ளனர். அதன்படி 375 பேர் செய்த முதலீடு 1 கோடியே 48 லட்ச ரூபாய் வசூலித்துள்ளார். இப்படி மொத்தம் 3 கோடியே 79 லட்ச ரூபாய் வாங்கியவர் வார வாரம் தருகிறேன் எனச்சொல்லி லாபத்தொகையை தரவில்லை.


அவரது சென்னை அலுவலகத்துக்கு சென்றபோது பூட்டியிருந்தது. அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் நிலையில் இருந்தது. பணம் முதலீடு செய்தவர்கள் எனக்கு நெருக்கடி தருகிறார்கள். அதனால் அந்த பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் மனு தந்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட எஸ்.பி அலுவலக அதிகாரிகள், விசாரணை நடத்தி பின்னர் நடவடிக்கை எடுக்கிறோம் எனச்சொல்லி அனுப்பியுள்ளனர்.  


அதீத லாபத்துக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்துவிட்டு ஏமாந்து நிற்பவர்களில் 90 சதவிதம் நன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

 

சார்ந்த செய்திகள்