மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பற்றி விமர்சனம் செய்யும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு பதிவிட்டதாக கூறப்படும் முகநூல் பதிவை நீக்கக்கோரியதாகவும், வன்னியரசும் சம்பந்தப்பட்ட பதிவை நீக்கிவிட்டதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
வன்னியரசிடம் அந்த பதிவை நீக்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன். உடனடியாக அவர் அதற்கு வருத்தம் தெரிவித்து அந்த பதிவை நீக்கிக்கொண்டார். அவருடைய உதவியாளருக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார். அதன்பின் வைகோ அவர்கள் சொல்லியிருக்கிற கருத்து அதோடு தொடர்புடையதாக தெரியவில்லை.
2006 சட்டப்பேரவை தேர்தலின் பொழுது தன்னுடைய இல்லத்திற்கு வரும்படி வரவேற்றார், உபசரித்தார், உதவி செய்தார், பலமுறை அவருக்கு நேரில் நன்றி சொல்லியிருக்கிறேன்.
அது வெளிப்படையான ஒன்று. ஒளிவு மறைவு அல்ல. ஆனால் வன்னியரசு எழுதிய பதிவிற்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.அதை எந்த அடிப்படையில் வைகோ சொல்லியிருக்கிறார் என்று தெரியவில்லை. என் மீது உள்ள கோபமா? அல்லது வன்னியரசு பதிவு செய்த கருத்துக்கு விடையா? என்று தெரியவில்லை.
கட்சி தலைமை சொல்லித்தான் இந்த பதிவு இடப்பட்டுள்ளது என்ற கருத்து தவறானது. அந்த அளவுக்கு தரம் தாழ்ந்த அரசியல் செய்பவன் அல்ல திருமாவளவன். என்னை கடுமையாக விமர்சிப்பவர்களை கூட நான் விமர்சிப்பதில்லை. ஒரு விமர்சனத்தை சொல்லவேண்டும் என நினைத்தால் நேருக்கு நேர் சொல்வேன். அந்த துணிச்சல் எனக்குண்டு, யாரையும் தூண்டிவிட்டு இப்படி எழுதுங்கள், அப்படி எழுதுங்கள் என சொல்லக்கூடிய அற்ப பிறவியல்ல திருமாவளவன் எனக்கூறினார்.