
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா 12 மணி நேர தொடர் விவாதத்துக்கு பிறகு, நள்ளிரவு நேரத்தில் திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில், வக்ஃப் வாரிய மசோதாவிற்கு ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்தனர், எதிராக 232 உறுப்பினர்கள் வாக்களித்தனர். வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா 128 எம்பிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் 98 எம்பிக்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.
முன்னதாக வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த அக்கட்சி தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பனையூரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்றார்.
அதில், 'திரும்பப் பெறு திரும்பப் பெறு வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறு; நிராகரிப்பும் நிராகரிப்போம் வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை நிராகரிப்போம்; பறிக்காதே பறிக்காதே இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்காதே; தலையிடாதே தலையிடாதே வக்ஃப் சொத்துக்களில் ஒன்றிய அரசே தலைகிடாதே; எதற்கு எதற்கு வக்ஃப் சொத்துக்களை பராமரிக்கும் குழுவில் மற்றவர்கள் எதற்கு; ஆபத்து ஆபத்து ஒன்றிய அரசால் வக்ஃப் சொத்துக்களுக்கு ஆபத்து' என புஸ்ஸி ஆனந்த் கோஷம் எழுப்பினார்.

பட்டினம்பாக்கம் பகுதியில் நடத்தப்ட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட தவெக தொண்டர்களை அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக போலீசார் கைது செய்ய முயன்றபோது பலர் இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயன்றனர். அதேபோல் சென்னை அமைந்தகரை பகுதியில் அனுமதியின்றி தவெக கட்சியினர் போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. அங்கு சென்ற போலீசார் கைது செய்ய முயன்ற நிலையில் தவெகவினர் குறுகிய தெருவில் தெறித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.