Skip to main content

மஞ்சள் விலை குவிண்டாலுக்கு 1000 ரூபாய் சரிவு!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

புதுவரத்து மஞ்சளுக்கு எதிர்பார்ப்பு நிலவுவதால் பழைய மஞ்சள் விலை குவிண்டாலுக்கு 1000 ரூபாய் வரை குறைந்துள்ளது. 


தமிழகத்தில் மஞ்சள் விளைச்சலில் ஈரோடு மாவட்டம் முன்னணியில் உள்ளது. அதற்கு அடுத்து, சேலம் மாவட்டத்தில் அதிகளவில் மஞ்சள் பயிரிடப்பட்டு வருகிறது. தமிழக மஞ்சளுக்கு வட இந்திய மாநிலங்களிலும் பெரும் வரவேற்பு இருப்பதால், இங்கிருந்து அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.  இந்நிலையில், கடந்த தீபாவளி பண்டிகைக்கு பிறகு மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காததால், ஏல மையங்களுக்கு மஞ்சள் வரத்து 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.  இதுகுறித்து மஞ்சள் விவசாயிகள் கூறியதாவது:

turmeric price suddenly decrease



சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மஞ்சளை விவசாயிகள் சேலம் லீ பஜார் மஞ்சள் மார்க்கெட்டுக்கு ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். தற்போது புது மஞ்சளை எதிர்பார்த்து காத்திருப்பதால், பழைய மஞ்சள் விற்பனை குறைந்துள்ளது. நேற்று (நவ. 27) நடந்த மஞ்சள் ஏலத்தில் வழக்கமாக வரவேண்டிய வரத்தைக் காட்டிலும் 50 சதவீதம் குறைந்துள்ளது. 


கடந்த சில வாரங்களாக மஞ்சள் குவிண்டால் 7500 ரூபாய் முதல் 8500 ரூபாய் வரை விலை போனது. நடப்பு வாரத்தில் குவிண்டால் 1000 ரூபாய் வரை குறைந்தது. தற்போது ஒரு குவிண்டால் மஞ்சள் 6500 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. 


சேலம் லீ பஜார் ஏல மையத்திற்கு வழக்கமாக 60 முதல் 70 டன் மஞ்சள் விற்பனைக்கு வரும். இதன்மூலம் 50 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரை ஏலம் நடக்கும். நேற்று நடந்த ஏலத்திற்கு 30 டன் மஞ்சள் மட்டும் விற்பனைக்கு வந்தது. இவை 25 லட்சத்திற்கு விற்பனை ஆனது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.