![Tragedy befell the young people who went to their friend wedding](http://image.nakkheeran.in/cdn/farfuture/ia2dxAEJPlAQtGML3qEt0n5oyG2GwsUmPqKs5smM5-o/1738833839/sites/default/files/inline-images/50_102.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காந்திஜி சாலையை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் சிவ.சூர்யா(21). இவரும் இவரது நண்பர் பனங்குளம் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த நீதி மகன் நிவாஸ் உள்ளிட்ட உள்ளிட்ட சில நண்பர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை கீரமங்கலத்தில் நடந்த மற்றொரு நண்பரின் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த நிலையில் மாலையில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சிவ.சூர்யா, நிவாஸ் மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் பனங்குளம் பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் சிவ.சூர்யா மற்றும் நிவாஸ் இருவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அறந்தாங்கி சாலையில் கீரமங்கலம் மேற்கு பகுதியில் ஒரு சிறிய வளைவில் செல்லும் போது எதிரே வந்த வந்த வாகனத்திற்கு வழிவிடத் தனது இருசக்கர வாகனத்தை கீழே இறக்கும் போது நிலைதடுமாறி அருகில் உள்ள மண்மேட்டில் மோதி சாலையில் விழுந்ததில் சிவ.சூர்யாவும், நிவாஸும் படுகாயமடைந்து கிடந்துள்ளனர்.
அந்த வழியாகச் சென்றவர்கள் சுயநினைவின்றி கிடந்த அவர்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சிவ.சூர்யாவை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கும் நிவாஸை திருச்சி தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சூர்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நண்பன் வீட்டுத் திருமண விருந்திற்கு சென்ற நண்பர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த தகவல் அறிந்து சக நண்பர்களும் உறவினர்களும் கதறி அழுகின்றனர்.