தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் அருகே வாரசிகுடா பகுதியைச் சேர்ந்தவர் லலிதா. இவருக்கு, ரவலிகா (25) மற்றும் அஷ்விதா (22) ஆகிய இரண்டு மகள்கள் இருக்கின்றனர். லலிதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த 2020ஆம் ஆண்டு அவரது கணவர் வீட்டை விட்டை வெளியேறியுள்ளார். ரவலிகா புடவைக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், லலிதா கடந்த வாரம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இறந்த தங்களது தாயை, தகனம் செய்ய அவர்களுக்கு நிதி இல்லை என்று கூறப்படுகிறது. அதனால், தாயின் உடலை வீட்டில் உள்ள அறையில் வைத்து விட்டு சகோதரிகள் இருவரும் வேறு ஒரு அறையில் ஒரு வாரமாக தங்கியுள்ளனர். உதவிக்காக உறவினர்களுக்கு அழைத்த போதும், அவர்கள் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து, வீட்டில் துர்நாற்றம் வீசுவதை கண்ட அக்கம்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.