
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய பி.எட் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று பி.எட் இரண்டாம் ஆண்டு 4வது செமஸ்டர், "creating an inclusive school" என்ற பாடத்திற்கான தேர்வு நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில், காலை 10 மணிக்கு தேர்வு நடக்கவிருந்த இந்த பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தமிழ்நாடு உயர்கல்வி துறையின் கவனத்திற்குச் சென்றதையடுத்து, கசிந்த வினாத்தாள் திரும்பப் பெறப்பட்டது. அதன்பிறகு, காலை 9.15 மணிக்குள் புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படும் எனத் தமிழ்நாடு உயர் கல்வித்துறை தெரிவித்தது.
இந்த நிலையில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாகத் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ராமகிருஷணன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு தற்போது, ராஜசேகர் புதிய பதிவாளராக கல்வித்துறை நியமித்துள்ளது. கடந்த ஒன்னறைஆண்டுகளாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு புதிதாகத் துணைவேந்தர் நியமிக்கப்படாததே இந்த மாதிரியான முறைகேடுகள் நடப்பதற்குக் காரணம் என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.