சென்னை சூளைமேட்டை சேர்ந்த 15 வயது சிறுவனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேட்டில் ரோட்டோரம் வசித்துவந்த பெருமாள் ஜோதியம்மாள் என்பவர்களுடைய 15 வயது மகன் ராஜேஷ். கடந்த பொங்கலன்று சிறுவன் ராஜேஷ் காணாமல் போய்விட்டதாக பெற்றோர்கள் ஜனவரி 21-ஆம் தேதிசூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதை தொடர்ந்து சூளைமேடு போலீசார் இது தொடர்பாக விசாரித்து வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் முன்னேற்றம் இல்லாததால் தொய்வில் இருந்துவந்தது இந்த வழக்கு.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் அலுவலகத்தில் பரத்குமார் என்ற 19 வயது இளைஞனும் 17 வயது கொண்ட இரண்டு சிறுவர்களும் சரணடைந்தனர். கடந்த பொங்கலன்று சூளைமேடு நமச்சிவாயபுரத்தில் உள்ள ஒதுக்குப்புறத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது அங்கு கத்தியுடன் வந்த சிறுவன் ராஜேஷ் காசு கேட்டு மிரட்டியதாகவும் அதனால் தங்களுக்குள் சண்டை முற்றியதாகவும். ராஜேஷ் கையில் வைத்திருந்த கத்தியால் குத்த ஒரு சிறுவனுக்கு சிறிய காயம் ஏற்பட்டகாகவும் அதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்று நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் புதைத்ததாகவும் போலீசாரிடம் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதை தொடர்ந்து புதைக்கப்பட்ட சடலம் தோண்டி எடுக்கபடும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொலை சம்பந்தமாக இன்னொரு சிறுவனையும் தேடிவருகின்றனர்.