Skip to main content

“தி.மு.க. ஆட்சியா? பா.ம.க. ஆட்சியா?” - ஆசிரியைக்கு மிரட்டல் விடுத்த ஆளும்கட்சி பிரமுகர் 

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

Thiruvannamalai government school issue

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டு கடந்த 25 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை திருவாரூரில் இருந்து தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட அமைச்சர்களும், தொகுதிகளில் எம்.எல்.ஏக்களும், ஒன்றியக்குழு சேர்மன்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஏதாவது ஒரு கிராமத்தில் தொடங்கி வைத்தனர்.

 

இது சிறந்த திட்டம் என்பதால் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் குறிப்பாக கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளில் கலந்துகொண்டனர். அதன்படி கடந்த 21 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் இனாம்காரியந்தல் ஊராட்சி வெங்காயவேலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஒத்திகைக்காக உணவு தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பா.ம.க.வைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் முருகன், ஊராட்சித் துணைத் தலைவர் கங்கா குருமூர்த்தி மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு காலை உணவுகளை வழங்கி உள்ளனர். இந்நிகழ்ச்சி இளநிலை ஆசிரியர் ஜோதிலட்சுமி ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

 

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி மாலை திமுக கிளைச் செயலாளர் பன்னீர், இளநிலை ஆசிரியை ஜோதிலட்சுமியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், ‘பா.ம.க.வை அழைத்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பீர்களா, சி.இ.ஓ.வை பார்த்து மந்திரியிடம் போட்டோவுடன் அனுப்பி உன்னை பார்த்து விடுவேன். நாளை பள்ளி திறந்தால் பசங்களை வைத்து பிரச்சனை செய்வேன். தி.மு.க. ஆட்சி நடக்கிறதா? பா.ம.க. ஆட்சி நடக்கிறதா? பள்ளியில் கட்சி நடத்துகிறீர்களா? பள்ளியில் ஒரு நாள் கூட வேலை பார்க்க முடியாது’ எனப் பேசியுள்ளார்.

 

அதேசமயம் ஆசிரியை ஜோதிலட்சுமி, “சம்பவம் நடந்த அன்று தலைமை ஆசிரியர் இல்லாததால் நான் வெறும் ஏற்பாடுகளை மட்டுமே மேற்கொண்டேன். ஆனால், எனக்கு தொடர்பு கொண்டு ‘பள்ளியில் ஒரு நாள் கூட வேலை பார்க்க முடியாது’ என மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதனால், எனக்கு வேலைக்குச் செல்லவே அச்சமாக இருக்கிறது” என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

 

பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள முன்மாதிரியான காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்தி வரும் நிலையில், தற்பொழுது இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற தவறுகள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் நிர்வாகிகள் மீது கட்சியின் தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

 

அரசு ஊழியர்களும் தங்களது சாதி, மத, அரசியல் நிலைப்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அரசுப் பணியைச் செய்யவேண்டும். தங்கள் பணியைச் சரியாக செய்யும்போது குறுக்கீடுகள் வரும்போது அதுகுறித்து தங்களது துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அங்கு நடவடிக்கை இல்லாத பட்சத்தில் காவல்துறையில் புகார் தெரிவிக்கலாம். ஆனால், பல துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் சிலர் தங்களது புகார்களைத் தங்களது மேல் அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் நேரடியாக சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இது அரசுப் பணியாளர் விதிகளை மீறிய செயலாகும் என்ற கருத்துகளும் சொல்லப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.