Skip to main content

“டிராக்டர்களை மனிதர்களே இழுக்கும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது..” - காவிரி தனபாலன்

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

"There is a fear that tractors will be pulled by humans ..." - Cauvery Dhanabalan



இயந்திரமயத்தால் மாடுகளைக் கொண்டு ஏறு பூட்டி உழுவுசெய்த காலம் மாறி, டிராக்டர்களைக் கொண்டு உழவுசெய்து விவசாயம் செய்துவருகின்றனர் விவசாயிகள். ஆனால், தற்போது அசுர வேகத்தில் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையால் செய்வதறியாது கலங்கி நிற்கிறார்கள். பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்த்திவரும் மத்திய அரசைக் கண்டித்து, நாகையில் வயலில் டிராக்டரைக் கயிறு கட்டி இழுத்து தங்களின் துயரநிலையை நூதன போராட்டத்தின் மூலம் வெளிபடுத்தியுள்ளனர்.


தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசலின் விலை ஜெட் வேகத்தில் நூரு ரூபாயைத் தாண்டிவிட்டது. மாவட்டத்திற்கு மாவட்டம் விலையேற்றமும் தொடர்கிறது. மக்களைப் பற்றி யோசிக்காமல் தடாலடியாக விலையை வெகுவாக உயர்த்தும் மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் பொதுமக்களும், அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் பல்வேறுகட்ட போராட்டங்களை நடந்துவருகின்றனர். 

 

இந்நிலையில், நாகையில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கண்டித்தும், விலையேற்றத்தால், வரும் காலங்களில் டிராக்டரை மனிதர்களே இழுக்கும் நிலை வந்துவிடும் என்பதை உணர்த்தும் விதமாகவும் டிராக்டரைக் கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்தும், விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர். 

 

இதுகுறித்து கூறிய காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த காவிரி தனபாலன், "கரோனா தாக்குதலால் ஒட்டுமொத்த நாடும் பொருளாதாரத்தால் முடங்கிக் கிடந்தபோது, நாட்டு மக்களைக் காப்பாற்றியது வேளாண்மையும் விவசாயமும் மட்டுமே. ஆனால் இன்று (01.07.2021) பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் விவசாயிகளின் நிலை கவலைக்கிடமாக மாறிவிட்டது. ஒரு ஏக்கர் விவசாயம் செய்ய 40 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. சென்ற ஆண்டு 2,000 ரூபாய்க்கு வாங்கிய டீசல், இந்த ஆண்டு கடுமையான விலையேற்றத்தால் 4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்.

 

ஒரு ஏக்கருக்கு இரண்டு டன் விளைச்சல் செய்யப்பட்டால் 1,400 ரூபாய் கிடைக்கும். ஆனால் அதையும் தாண்டி 2,000 ரூபாய்க்கு டீசல் மட்டுமே வாங்கும் நிலையாகிவிட்டது. ஆகவே பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளைப் போல பெட்ரோல் டீசல் விலையை 50 ரூபாய்க்கு குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். ஆனால், மத்திய அரசோ டீசல், பெட்ரோல் விலையைக் குறைக்காமல் தொடர்ந்து ஏற்றிக்கொண்டே இருப்பது வேதனை அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

 

மாநில அரசு தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல டீசல், பெட்ரோல் விலையைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டும். இரு அரசுகளும் அதைச் செய்யத் தவறினால் விவசாயமும், விவசாயிகளும் சேர்ந்தே அழியும் நிலை ஏற்பட்டுவிடும். மாடுகளைப் பூட்டி உழவு செய்யப்பட்ட நிலங்களில் இயந்திரங்களுக்கு மாறியாச்சி, வருங்காலத்தில் மனிதர்களே இழுக்கும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் துவங்கிடுச்சி, அதை அரசுக்கு உணர்த்தும்விதமாக இந்த நூதனப் போராட்டத்தை நடத்தியுள்ளோம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.