Skip to main content

சேலம் அருகே மாயமான கார் டிரைவரை கொன்றது ஏன்? பரபரப்பு வாக்குமூலம்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

salem district car driver incident police investigation

 

சேலம் அருகே மாயமான கார் ஓட்டுநரைக் கொலை செய்தது ஏன் என்பது குறித்து கைதான இரு வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். 

 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள எம்ஜிஆர் காலனி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28). பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவந்தார். அத்துடன் சொந்தமாக காரும் ஓட்டிவந்தார். இவருடைய மனைவி வெண்ணிலா.

 

அக். 16ஆம் தேதியன்று, தொழில் சம்பந்தமாக வெளியே சென்றுவிட்டு வருவதாக மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றவர், அதன்பின் மூன்று நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. 

 

இதனால் பதற்றமடைந்த வெண்ணிலா, கணவரைக் காணவில்லை என தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 19ஆம் தேதியன்று காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து, ரமேஷ் குறித்து விசாரிக்கத் தொடங்கினர். 

 

இந்த நிலையில்தான், மாயமான ரமேஷ் கொலை செய்யப்பட்டதாக ஊருக்குள் திடீரென்று தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், தாரமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரினர். 

 

காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், ரமேஷ் கொலை செய்யப்பட்டது உறுதியானது. காவல் ஆய்வாளர்கள் குமார், தொல்காப்பியன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

 

தனிப்படையினர், சந்தேகத்தின்பேரில் தாரமங்கலத்தைச் சேர்ந்த சேகர் (வயது 28) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. 

 

கொலை செய்யப்பட்ட ரமேஷும், சேகரும் நெருங்கிய நண்பர்களாக பழகிவந்துள்ளனர். இருவரும் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்துள்ளனர். 

 

தொழில் நிமித்தமாக சேகர் வீட்டுக்கு அடிக்கடி ரமேஷ் சென்று வந்துள்ளார். அப்போது சேகருடைய மனைவியுடன் ரமேஷுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. சேகருக்கு தெரியாமல் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர். 

 

இதையறிந்த சேகர், அவர்கள் இருவரையும் கண்டித்திருக்கிறார். ஆனாலும் ரமேஷ், அவருடைய மனைவியை ரகசியமாக சந்திப்பதை தொடர்ந்தார். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த சேகர், இதற்கு மேலும் ரமேஷை உயிருடன் விட்டு வைத்தால் தன் குடும்பத்தைச் சிதைத்துவிடுவார் எனக் கருதி, அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். 

 

தனது திட்டத்தை வேறு சில நெருக்கமான நண்பர்களிடமும் கூறி உதவிக்கு அழைத்துள்ளார். அத்திட்டப்படி கடந்த 16ஆம் தேதியன்று, பழைய கார் ஒன்று விற்னைக்கு வந்துள்ளது. அதை நேரில் பார்க்க வருமாறு சேகரின் நண்பர்கள் அழைத்துள்ளனர். 

 

வீட்டிலிருந்து கிளம்பிய ரமேஷை வழியிலேயே 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தியுள்ளனர். காரில் செல்லும்போதே அவரை அந்த கும்பல் சரமாரியாக அடித்தே கொன்றுள்ளது. 

 

சேகரின் அக்காள் மகன்கள் இரண்டு பேர் பெங்களூருவில் கல் உடைக்கும் தொழிலாளிகளாக உள்ளனர். அவர்களும் அந்தக் காரில் இருந்ததால், சடலத்தைப் பெங்களூருவுக்குக் கடத்திச் சென்று ஏரியில் வீசிவிடலாம் என யோசனை தெரிவித்துள்ளனர். அதன்படியே சடலத்தைப் பெங்களூருவுக்குக் கொண்டு சென்று அங்குள்ள ஒரு ஏரியில் வீசிவிட்டு அவரவர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சடலம் தண்ணீரில் மிதந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் சடலத்துடன் பெரிய கல்லைக் கட்டி வீசியுள்ளனர். 

 

ஆனால் சடலம் அழுகியதால் கட்டப்பட்டிருந்த கல்லும் நெகிழ்ந்து, தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் சடலம் நீருக்கு மேல் மிதந்துள்ளது. இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் நிலமங்களா காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். சடலத்தைக் கைப்பற்றிய நிலமங்களா காவல்துறையினர், உடற்கூறாய்வுக்குப் பிறகு உள்ளூரிலேயே புதைத்துவிட்டனர். 

 

இதையடுத்து ரமேஷ் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட சேகர் (வயது 30), அவருடைய கூட்டாளி நொள்ளையன் என்கிற ராதாகிருஷ்ணன் (வயது 30) ஆகிய இருவரையும் தாரமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். சேகரின் அக்காள் மகன்கள் இருவரையும் தேடிவருகின்றனர். 

 

மேலும், இதுகுறித்து தாரமங்கலம் காவல்துறையினர் நிலமங்களா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து, சடலத்தை உடற்கூறாய்வு செய்த அறிக்கை உள்ளிட்ட விவரங்களைக் கேட்டுப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நிலமங்களா காவல்துறையினரும், அங்கு சடலத்தைக் கைப்பற்றிய வழக்கை, தாரமங்கலத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.