Skip to main content

டாஸ்மாக் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவலர்களின் எண்ணிக்கையை குறைக்கக்கோரிய வழக்கு முடித்து வைப்பு!

Published on 21/07/2020 | Edited on 21/07/2020
high court chennai

 

பொதுமக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே, டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, தமிழக டிஜிபி தரப்பில் அறிக்கை  தாக்கல் செய்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், டாஸ்மாக் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவலர்களின் எண்ணிக்கையை குறைக்கக்கோரிய வழக்கை முடித்துவைத்துள்ளது.

 

கரோனா ஊரடங்கு காலத்திலும்,  டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்க, தமிழக அரசு மே மாதம் அனுமதி அளித்தது. கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர், மதுபானக் கடைகளின் பாதுகாப்புக்காக பணியில் ஈடுப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி,  டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாதுகாப்பிற்காக ஈடுப்படுத்தப்பட்டுள்ள காவல்துறையினரைக் குறைக்க வேண்டுமென்றும், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், கூட்ட நெரிசலைத் தடுக்கவும், கரோனா தடுப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கான பணிகளில் அதிக காவல்துறையினரை ஈடுப்படுத்தும்படி உத்தரவிட வேண்டும் என கோவையைச் சேர்ந்த தேசிய அனைத்து மத நண்பர்கள் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் பன்னீர் செல்வம் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக டிஜிபி சார்பில் உதவி ஐஜி இ.டி.சாம்சனின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

 

அந்த அறிக்கையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக போதிய காவலர்கள் ஒதுக்கப்படுவதாகவும், அதுதவிர,  ரேசன் கடை, மீன் சந்தை, காய்கறி அங்காடி, அத்தியாவசியத் தேவைகளுக்காக, மக்கள் நடமாட்டம், கரோனா தாக்குதலில் கடடுப்படுத்தப்பட்ட பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள், சோதனைச் சாவடி, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் ஆகிய பணிகளிலும், காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

 

மேலும், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலும் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு மண்டலத்தில் டாஸ்மாக் பணிக்கு 583 பேரும், பிற பணிக்கு 7,749 பேரும்; மத்திய மண்டலத்தில் டாஸ்மாக் பணிக்கு 363 பேரும், பிற பணிக்கு 5 ஆயிரத்து 295 பேரும்; மேற்கு மண்டலத்தில் டாஸ்மாக் பணிக்கு 887 பேரும், பிற பணிக்கு 7 ஆயிரத்து 954 பேரும்; தெற்கு மண்டலத்தில் டாஸ்மாக் பணிக்கு 764 பேரும், பிற பணிக்கு 11 ஆயிரத்து 876 பேரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை, சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற பெருநகரங்களில் டாஸ்மாக் பாதுகாப்பு பணிக்கு 410 பேரும், பிற பாதுகாப்பு பணிகளுக்கு 10,545 பேரும் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

 

ஒட்டுமொத்த தமிழகத்தில், பிற பணிகளுக்கு 43,119 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் பாதுகாப்பு பணிக்கு 3,007 பேர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் போதிய காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

இவர்களைத் தவிர, கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஊர்காவல் படையைச் சேர்ந்த 9,326 ஆண்கள், 2,059 பெண்கள் என,  11,385 பேர் ஈடுபடுத்தப்பட்டதாக, உதவி ஐ.ஜி. சாம்சன் விளக்கம் அளித்துள்ளார். இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

2024 ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
2024 Vck Awards Announcement!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமையினருக்கு, “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு  இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக - விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அம்பேத்கர் சுடர் விருது - நடிகர் பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி விருது - வழக்கறிஞரும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளருமான அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காமராசர் கதிர் விருது - இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது - பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருது - வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர்  எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது - கல்வெட்டியலறிஞர் எ. சுப்பராயலுவுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா மே 25 ஆம் தேதி (25.05.2024) சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ளார்.