Skip to main content

'முழு ஊரடங்கை மீறினால் நடவடிக்கை' - காவல்துறை எச்சரிக்கை!

Published on 14/05/2021 | Edited on 14/05/2021

 

coronavirus prevention complete lockdown tamilnadu police

 

முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் நடமாடும் நபர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

 

தமிழக காவல்துறை நேற்று (13/05/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கொடிய கரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கு 10/05/2021 முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்தது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும், கரோனா பரவாமல் இருக்க முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி கொண்டு கைகளைக் கழுவுவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது மற்றும் இதர அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

 

10/05/2021 முதல் இன்றுவரை தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் கடந்த நான்கு நாட்களாக ஒலிபெருக்கி மூலமும் துண்டு பிரசுரங்கள் மூலமும் பொதுமக்கள் மேற்கூறிய அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுரைகள் வழங்கிவந்துள்ளனர். இவ்வறிவுரைகளைப் பொதுமக்களில் ஒரு சிலர் சரியாகவும் ஒழுங்காகவும் பின்பற்றாததால் கொடிய தொற்று மேலும் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. 

 

இன்று (14/05/2021) முதல் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. தமிழக அரசின் அறிவுரைகளைப் பின்பற்றி, கரோனா தீவிரமாக பரவிவரும் இக்காலக்கட்டத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து பொதுமக்கள் தங்களைத் தவிர்த்துக்கொள்ளும்படி தமிழக காவல்துறை கேட்டுக்கொள்கிறது." இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக போலீசார் யாருடைய ஏஜென்ட்? - நீதிமன்றம் கேள்வி

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

 'Whose agent are the Tamilnadu police'-Court asks

 

மதுவிலக்கு கொள்கை பிரச்சாரம் மேற்கொள்ள மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி வேண்டும் என பாமக சார்பில் ராணிப்பேட்டை காவல்துறையில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவல்துறை இதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட பாமக செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மாரத்தான் ஓடுவதற்கும் நடப்பதற்கும் காவல்துறை அனுமதி வழங்கும்போது மதுவுக்கு எதிரான பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? எனக் காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார். மேலும் ஆளும் கட்சியினருக்கு மட்டும்தான் காவல்துறை அனுமதி வழங்குகிறதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

 

யாருக்காக காவல்துறையினர் உள்ளனர். ஆளுங்கட்சியினருக்காகவா அல்லது பொது மக்களுக்காகவா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ஜெயச்சந்திரன், வருமான வரித்துறை அமலாக்கத்துறை ஆகியவை சோதனைக்கு வந்தால் மத்திய அரசின் ஏஜென்ட்கள் எனக் குற்றம் சாட்டும் பொழுது தமிழக காவல்துறை யாருடைய ஏஜென்டாக செயல்படுகிறது என்றும் வினவினார்.

 

ராணிப்பேட்டையில் பாமகவின் மதுவிலக்கு கொள்கை பிரச்சார பேரணிக்கு அனுமதி மறுத்தது குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்றால் டிஎஸ்பி நேரில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 

 

Next Story

'இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி' - சென்னை காவல்துறை எச்சரிக்கை

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

n

 

வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் பொது இடங்கள் மற்றும் கடைத் தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் பட்டாசு விற்பனை தொடர்பான கட்டுப்பாடு விதிமுறைகளைச் சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.

 

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 வரை என மொத்தமாக 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த விதிமுறையை மக்கள் பின்பற்ற வேண்டும்; தீபாவளி பண்டிகையின் போது சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்; பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்; பட்டாசுகளால் விபத்து நேர்ந்தால் 100, 101, 108, 112 ஆகிய எண்களை உடனே அழைக்க வேண்டும்; சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்கப்பட வேண்டும், வெடிக்கப்பட வேண்டும்; தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ/வெடிப்பதோ கூடாது; பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடுவதை பொதுமக்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்; பெரியவர்களின் பாதுகாப்பு இல்லாமல் குழந்தைகளிடம் தனியாக பட்டாசு வெடிகளை கொடுத்து வெடிக்க அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் மட்டும் தீபாவளியன்று சுமார் 18,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.