தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
![tamilnadu heavy rains dmk president mk stalin tweet](http://image.nakkheeran.in/cdn/farfuture/Rb0BzRTjryct_DaxUw4l-GT1adG_xJnBA6L8A6xh2w4/1575174844/sites/default/files/inline-images/mk%20stalin_5.jpg)
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும். சாலைகளில் வெள்ளமெனத் தேங்கி இருக்கும் தண்ணீர், பல ஊர்களில் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. தண்ணீர் தேக்கம் காரணமாக கொசு உற்பத்தி பெருகி, அதன் மூலம் டெங்கு பரவுவது அதிகரிக்கக் கூடும்.
வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசும், அரசு அதிகாரிகளும் உடனடியாக இறங்கிட வேண்டும். உடனடி நிவாரணப் பணிகளையும் உடனடியாகத் தொடங்கிட வேண்டும்"! என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.